சீனாவை வீழ்த்தும் சக்தி நமக்கு இருக்கிறது! உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: சர்வதேச அளவில் சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியா அதை வீழ்த்தி முன்னேற முடியும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தை முழுமையாக கைப்பற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத்தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்ததில்லை. இப்படி இருக்கையில் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுகள் சாதனையை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல், சமூக செயற்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை நடத்துதல் என யோகி ஆதித்யநாத் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், "நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நியாயமாக செய்தால் நாம் சீனாவை வீழ்த்தி உலக அளவில் முதல் இடத்தை பெற முடியும்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "நமது நாட்டை உலக தரத்தில் கட்டியெழுப்புவதில் உள்ள அவசியத்தையும் பொறுப்பையும் நாம் உணர வேண்டும். அதற்கு முன்னர் நாம் நமது பாரம்பரியத்தை உணர வேண்டும். அதேபோல நாம் எந்த பாரபட்சமும் இன்றி நமது கடமைகளை செய்ய வேண்டும். இதேபோலதான் அரசாங்கத்தின் திட்டங்களும் எந்த பாகுபாடும் இன்றி மக்களை சென்று சேர்கிறது. அதே பாணியில் நீங்களும் செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications