ரூ.14,840 கோடியில் 296 கி.மீ. நீள விரைவுசாலை! திறந்து வைத்த பிரதமர் மோடி! சிறப்பம்சங்கள் என்ன?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 296 கிலோமீட்டரை தொலைவுக்கான நான்குவழி எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இவரது கடந்த முறை முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டன.
அதில் ஒன்று தான் பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தில் தொழில்துறை மேம்பாட்டை கருத்தில் கொண்டு இத்திட்டம் வகுக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
அதன்படி உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் பாரத்கூப் அருகே உள்ள கோண்டா கிராமத்தின் என்எச் 35ல் இருந்து எட்டாவா மாவட்டம் குதிரை கிராமத்தின் அருகே செல்லும் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2020 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.

296 கிமீ எக்ஸ்பிரஸ் சாலை
அதன்பிறகு திட்டப்பணிகள் துவங்கியது. உத்தர பிரதேச விரைவு சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்த சாலையானது ரூ.14,850 கோடி செலவில் 296 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி தற்போது 28 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கும் பிரதமர் மோடி
இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இன்று கான்பூர் விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார். பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து ஜாலன் நகரில் நடந்த விழாவில் ரிமோட் பட்டனை அழுத்தி பிரதமர் நரேந்திர மோடி புதிய சாலையை திறந்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

7 மாவட்டங்களுடன் இணைப்பு
இந்த சாலை திட்டமானது வரும் நாட்களில் 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை திட்டம் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும். உத்தர பிரதேசத்தின் சித்ரகூட், பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், அவுரையா மற்றும் எட்டாவா ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்ல உள்ளதால் பிராந்திய இணைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிய ஊக்கத்தை அளிக்க உள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. பண்டா மற்றும் ஜலான் மாவட்டங்களில் தொழில்துறைக்கான காரிடார் பணிகளும் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி நம்பிக்கை
இந்த திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‛‛எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையால் உத்தரபிரதேச மாநில பொருளாதாரம் பெரிதும் வளரும்'' என கூறியுள்ளார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதன் முக்கிய அம்சம் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகும். இதன் ஒருபகுதியாக புந்தேல்கண்ட் சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது'' என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications