"எப்படி இருக்கீங்க.." டக்குனு அகிலேஷ் யாதவுக்கு போன் போட்ட யோகி ஆதித்யநாத்.. அடடே
லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் பாஜகவுக்கு எதிராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
தற்போது அகிலேஷ் யாதவ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திங்கள்கிழமை முதல் மத்திய மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிம்பிள் யாதவ் கூறுகையில், 2 தடுப்பூசிகள் போட்ட நிலையிலும் எந்த அறிகுறி இல்லாமலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொடர்பு கொண்டு அவரது மனைவி, மகள் ஆகியோரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அகிலேஷ் குடும்பத்தினர் விரைவில் குணமடைய தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
அதேநேரத்தில் அகிலேஷ் யாதவ் தடுப்பூசி போட மறுத்து வருகிறார். இது தொடர்பான பேட்டி ஒன்றில், நான் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தேன். அதனால் எனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்துக்குப் பதில் தேசியக் கொடி படம் அச்சிடப்பட்டால்தான் தடுப்பூசி போடுவேன் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.