1 ட்ரில்லியன் பொருளாதாரம்! ஊழலுக்கு எதிர்ப்பு! அதிகாரிகளுக்கு ஆதித்யநாத்தின் ஸ்டிரிக்ட் உத்தரவுகள்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான செயல் திட்டங்கள் தயாரிப்பதோடு, அரசு திட்டங்களில் ஊழலுக்கு இடமளிக்க கூடாது என அம்மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 255 இடங்களில் பாஜக வென்று ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேச முதல்வராக நேற்று முன்தினம் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பதவியேற்றார்.
யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் 2 துணை முதல்வர்களும் அடங்கும். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு
உத்தர பிரேதச முதல்வராக யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பதவியேற்ற நிலையில் நேற்று முதல் முதலாக அமைச்சரவை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் இலவச ரேஷன் திட்டத்தை 3 மாதம் நீட்டிப்பு செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. இதன்மூலம் 15 கோடி மக்கள் பயன்பெற உள்ளனர் என யோகி ஆதித்யநாத் கூறினார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என அவர் கூறினார். இதுபற்றி அவர் பேசுகையில், "உத்தரபிரதேசத்தை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாகவும், பிற மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு வருவதே இலக்காக இருக்க வேண்டும். துறைகளுடன் ஒருங்கிணைந்து இதற்கான பணிகளை செய்ய வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்ற 10 முதன்மை துறைகளை அடையாளம் காண வேண்டும்" என உத்தரவிட்டார்.

செயல் திட்டங்கள்
பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதும் முக்கியமானதாகும். இதனால் 100 நாள், 6 மாதம், ஒரு ஆண்டுக்கான செயல் திட்டங்களை அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் உருவாக்க வேண்டும். இந்த செயல் திட்டங்கள் மூலம் குறித்த காலக்கட்டத்துக்குள் அப்பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

ஊழலுக்கு இடமில்லை
மேலும் கடந்த ஆட்சியை விட இந்த முறை அரசு நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்களும் இதை எதிர்ப்பார்த்துள்ளனர். இதனால் எக்காரணத்தை கொண்டும் ஊழலுக்கு வழிவகுத்து விடக்கூடாது. மத்திய, மாநில அரசுகளின் திட்ட பலன்கள் உடனடியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும். இதற்காக தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications