மாஃபியாக்களின் நடவடிக்கையை உ.பி வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது தலைமையிலான பாஜக அரசு, மாஃபியாக்களை நரகத்திற்கு அனுப்பியுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட அவர், உத்தரப் பிரதேசத்தில் தனது தலைமையிலான பாஜக அரசு, கலவரக்காரர்களை நரகத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ராஜஸ்தானில் அப்படி எதும் நடக்கவில்லை என்றும், இங்கு இன்னும் கலவரக்காரர்களின் அட்டூழியங்கள் தொடர்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மேலும் அவர் பேசியதாவது, "நாட்டின் மற்ற மாநிலங்கள் அனைத்தும் முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருக்கையில், ராஜஸ்தான் மட்டும் பின்னோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இங்கு குற்ற சம்பவங்கள் சீரான வேகத்தில் வளர்ச்சியடைகிறது. ஆனால் வளர்ச்சியோ தலைகீழாக சென்றுக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது நாட்டின் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நலன்கள் குறித்து கவலை கொள்ளவில்லை.
மாறாக முஸ்லீம்கள்தான் இந்த நாட்டின் முதல் தர குடிமக்களாக நடத்தியது. உத்தரப் பிரதேச மாநிலத்தை பாருங்கள், பிரதமர் மோடி மற்றும் மாநில பாஜக அரசின் இரட்டை என்ஜின்களின் மூலமாக ஏராளமான நலத்திட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications