'டாப்'.. சட்டம் ஒழுங்கில் பட்டைய கிளப்பும் உ.பி.. காவல்துறைக்கு 'சல்யூட்'.. முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுவதாகவும், இதனை திசை திருப்பவும் அரசு மீது அவதூறு ஏற்படுத்தவும் எதிர்க்கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் போறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் நீடித்ததில்லை. யோகி ஆதித்யநாத் தற்போது 6 ஆண்டுகளை நிறைவு செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். எனவேதான் மாநில அரசு இதனை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல், ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல் என யோகி பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜான்சியில் நடந்த என்கவுன்ட்டரில் பிரபல அரசியல்வாதியின் மகனும், ரவுடியுமான ஆசாத் அவரது கூட்டாளி ஒருவருடன் சுட்டு கொல்லப்பட்டார். இதன் மூலம் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுகால ஆட்சியில் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 183 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது இந்த என்கவுன்டர்களில் பல 'போலி' என்கவுன்ட்டர்கள் அடங்கியுள்ளன. எனவே இது குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார். அதாவது, "உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
ஆனால் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மாநிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை 10,900க்கும் அதிகமான என்கவுன்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 23,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 5,046 பேர் காயமடைந்துள்ளனர். குற்றவாளிகள் ஒருபுறம் காயமடைந்தாலும் மறுபுறம் அவர்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 1,443 பேர் காயமடைந்தனர். 13 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தனை இழப்புகளும் தற்போது மாநிலத்தின் முன்னேற்றத்தை நோக்கி வேகமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. எனவே உயிரிழந்த காவலர்களுக்கு நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். பாஜக குற்றங்களையும், ஊழல்களையும், மாஃபியாக்களையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்களுக்கு எதிராக இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உ.பி தற்போது 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால் குற்றங்கள் இல்லாத மாநிலம் என்கிற நிலையை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications