ரூ.35 ஆயிரம் கோடியில் 311 திட்டங்கள்.. வளர்ச்சி பாதையில் சீறும் உ.பி! யோகி ஆதித்யநாத் அசத்தல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்த ரூ.35,126.94 கோடியில் 311 திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த 311 திட்டங்களை இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாரௌத்தில் உள்ள ஜனதா வேதிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். இந்த 311 திட்டங்களில் 195 திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டிருக்கிறது. இதை தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு அவர் தொடங்கி வைத்திருக்கிறார். அதேபோல 116 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த திட்டங்கள் அனைத்தும் பாக்பத் மாவட்டத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டங்களில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களையும் அவர் கூறியுள்ளார். அதாவது, "30 தொடக்கப் பள்ளிகளை சீரமைத்தல், குளம் புதுப்பித்தல், கிராமங்களை இணைக்க சாலை அமைத்தல், ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகளை பழுதுபார்த்தல், கர்ஹி கலஞ்சரி அருகே ஹிண்டன் ஆற்றின் மீது பாலம் கட்டுதல், அஹெடா ரயில் நிறுத்தத்தில் மேம்பாலம் அமைத்தல் ஆகியவை முக்கியமான திட்டங்களாகும். இதற்காக மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்திருக்கிறார். அந்த வகையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் பாஜக அரசின் முதல் நோக்கம்" என்று கூறியுள்ளார்.
இது தவிர பாவோலியில் கேந்திரிய வித்யாலயாவைத் திறந்து வைத்தார், பாக்பத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் அமிநகர் சராய்யில் அரசுக் கல்லூரி மற்றும் கெக்ராவில் அரசு ஆயுர்வேத மருந்தகம் கட்டவும் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் இப்பகுதியில் கல்வி அணுகல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications