கடன் சுமை.. நகை திருட்டு பழி.. உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடன் தொல்லையால் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான ஆர்கே தேவர் தெருவில் வசித்து வருபவர் அய்யாவு மகன் சரவணன் (35). இவர் உசிலம்பட்டி நகைகடை பஜார் தெருவில் நகைபட்டறை வைத்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜி (எ) பூங்கோதை (24), மற்றும் மகள்கள் மாகலெட்சுமி(10), அபிராமி(6), மகன் அமுதன்(5) உள்ளனர்.
இந்த நிலையில் நகை பட்டறை தொழிலை விரிவுபடுத்துவதற்காக சிலரிடம் கடனுக்கு பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் சரவணன் தவித்து வந்தார். கடந்த வருடம் கொரோனா முழு ஊரடங்கின் போது பெரும் கடன்சுமைக்கு ஆளானார்.
பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் – வெறும் கவர்ச்சித் திட்டமா? - அ.குமரேசன்
நெருக்கடி
மேலும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் நகைபட்டறையை மதியம் 12மணிக்கே அடைத்துவிட்டு செல்வதால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்களும் வட்டியுடன் சேர்த்து அசலும் தரவேண்டுமென நெருக்கடி கொடுத்துள்ளனர்.
5 பேரும் மரணம்
இதனால் மனமுடைந்த சரவணன் மற்றும் மனைவி விஜி ஆகிய இருவரும் தனது இரு மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் விஷம் கொடுத்து கொலைசெய்து தாங்களும் (நகைக்கு பாலீஸ் போடும் கெமிக்கல்) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
என்ன நடந்தது
இதற்கிடையே வழக்கம் போல் இன்று காலையில் 7மணிக்கு அவரது குழந்தை அருகில் உள்ள கடையில் பால்பாக்கெட்டுக்கள் வாங்கிகொண்டு வீட்டிற்குள் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அப்போது வீட்டிற்குள் சென்ற குடும்பத்தினர் காலை 11மணி வரை வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
கடிதம் சிக்கியது
உடனே உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரனை நடத்தினர். அப்போது வீட்டில் போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் குடும்பத்தினரின் சாவுக்கு யாரும் காரணமில்லை. வாங்கிய கடனே காரணம் என்று கூறியுள்ளார்.
மன உளைச்சல்
மேலும் தனது அப்பா அய்யாவு நகைபட்டறையில் நகைகள் திருடு போனது. ஆனால் அந்த நகையை நான்தான் திருடினேன் என கூறி கடந்த மாதம் என்மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் நான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகினேன் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் பணக்காரர்கள் மத்தியில் எவ்வளவு பணம் இருந்தாலும் வியாதியால் மடிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஏழைகள் உண்ண உணவுக்கு கூட வழியின்றி பசியினால் மடிந்து கொண்டிருப்பதே உண்மை.