தெரிந்து பேசினாரா? தெரியாமல் பேசினாரா? போகிற போக்கில் கொளுத்திப் போட்ட செல்லூர் ராஜூ!
மதுரை: மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக அமைச்சர்களில் ஒருவர் கூட அங்கு வந்து மரியாதை செய்யவில்லை எனக் கூறினார்.
நாயக்கர் சமுதாய மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற திமுக இப்படிச் செய்யலாமா என்றும் இதனால் அந்தச் சமுதாய மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார் செல்லூர் ராஜூ.
ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு போன 4 மாஜிக்கள்..
இதனிடையே அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், மூர்த்தியும் செல்லூர் ராஜூவுக்கு முன்பாக ஏற்கனவே திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
திருமலை நாயக்கர்
திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் மரியாதை செலுத்த வந்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாயக்கர் சமுதாயத்தை திமுக அரசு புறக்கணிப்பதாக பேசினார். திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவுக்கு ஒரு அமைச்சர் கூட மரியாதை செலுத்த வரவில்லை எனத் தெரிவித்தார்.
செல்லூர் ராஜூ
அவர் இவ்வாறு பேட்டி அளித்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இரண்டு அமைச்சர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர். பழனிவேல் தியாகராஜனும், மூர்த்தியும், வந்து சென்ற தகவல் தெரிந்து தான் பேசினாரா அல்லது அமைச்சர்கள் வருகை குறித்த தகவல் தெரியாமல் பேசினாரா எனத் தெரியவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் செல்லூர் ராஜூவின் இந்தப் பேட்டியில் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
காழ்ப்புணர்ச்சி
மேலும், பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவே மாறிய செல்லூர் ராஜூ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசை திமுக அரசு குறை கூறி வருவதாக தெரிவித்தார். தமிழ் மொழியை உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் தமிழர்களின் பெருமையையும், வரலாற்றையும் எடுத்துக்கூறிய ஒரே பிரதமர் மோடி தான் எனவும் பாராட்டு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
தமிழ்ப்பற்று
பிரதமர் மோடி குஜராத்தில் பிறந்தவராக இருந்தாலும் தமிழ் மீது பற்று கொண்டவர் என்றும் சீன பிரதமரை அழைத்து வந்து தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தவர் மோடி எனவும் தெரிவித்தார். மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் பிரதமரின் அனுமதியால் தான் 11 மருத்துவக்கல்லூரிகள் தற்போது தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.