“பேரறிவாளன் ரிலீஸுக்கு ஜெயலலிதா, எடப்பாடி, ஓபிஎஸ் தான் காரணம்” - போட்டிக்கு வந்த முன்னாள் அமைச்சர்!
மதுரை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில் 7 பேர் விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதா உள்ளிட்டோரையே சேரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையே சேரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இன்றும் அ.தி.மு.க அரசு எழுவர் விடுதலையை ஆதரித்தே வருகிறது.
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.

திமுக ஆட்சியில்
2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை கூடி, எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்தார். இதையடுத்து
தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு ஸ்டாலின் எழுவர் விடுதலை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களோடு ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிமுக - திமுக
தற்போது பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்துள்ள நிலையில், தி.மு.க அரசு மேற்கொண்ட சட்டப்பூர்வ முயற்சிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்தான் அதிமுகவினர், பேரறிவாளன் விடுதலைக்கு முந்தைய அதிமுக அரசே காரணம் எனக் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் தளராத சட்டப் போராட்டம் காரணமாகவே இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

அதிமுக சாதனை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நாடகமேடைகளை திறந்து வைத்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "இன்றைக்கு பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. ஆனால் 7 பேர் விடுதலை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையே சாரும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவே காரணம்
7 பேர் விடுதலைக்காக முதன் முதலாக மன உறுதியோடு தைரியத்தோடு தமிழர்களை காக்கும் காவல் தெய்வமாக ஜெயலலிதாவும், எடப்பாடியும் செயல்பட்டனர். அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்தனர். இந்நிலையில்தான் உச்சநீதிமன்றம் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு வந்திருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications