கோவில்களில் செல்போனுக்கு தடை..கண்ணியமான ஆடை..இந்து சமய அறநிலையத்துறைக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தமிழகம் முழுவதும் கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றக்கூடிய சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பதே சிலை திருட்டுக்கு வழிவகுப்பதால் செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் விசாரணையை மேற்கொண்ட போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கன்னியமான உடை
குறிப்பாக கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நாகரிகமான உடை அணிவது கிடையாது. லெக்கின்ஸ் மற்றும் அரை டவுசர் அணிந்து கொண்டு கோவிலுக்கு வருகின்றனர். இது வேதனை அளிக்கின்றது. கோவில்கள் என்பது சுற்றுலா தளங்கள் இல்லை. அது மக்களின் பய பக்தியை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்கின்றது என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

செல்போன்
இதுபோன்ற இடங்களில் தான் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. கோவில் சிலைகளுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அந்த கோவிலில் அர்ச்சகர்களாக இருக்கக்கூடியவர்களே கோவிலுக்குள் செல்ஃபி எடுத்துக்கொண்டு தங்களின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். இது ஏற்கத்தக்க விஷயம் அல்ல.

கோவிலுக்குள் செல்போனுக்கு தடை
குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கோவில்கள் சத்திரம் போல் இருக்கின்றது. திருப்பதியில் கோவில் வாசலில் கூட செல்போன் எடுத்து செல்ல முடியாது. அந்த நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
இதனையடுத்து, திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கையை இந்து அறநிலையத்துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

செல்போன் பறிமுதல்
தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அளிக்கக்கூடாது. குறிப்பாக கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அர்ச்சகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதற்கான நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

கோவில்களின் புனிதம்
இதனிடையே இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். கோவில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக இந்த உத்தரவுகளை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

பக்தியுடன் வரவேண்டும்
கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு அறிவுறுத்தினர். கோயிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் வகையில் ஆடைகள் அணிந்து வர விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications