பேசியதே சரவணன் தான்.. நான் காரில் இருந்தேன்.. வேணும்னா போனை ஆய்வு பண்ணுங்க.. பாஜக நிர்வாகி பரபர!
மதுரை : அண்ணாமலை போன் உரையாடலை மிமிக்ரி செய்து பரப்பியது முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தான் என பாஜகவினர் கொந்தளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையே காரணம் என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், அந்த ஆடியோ போலியானது என பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், டாக்டர் சரவணன் வேண்டுமென்றே சதி செய்து, ஆட்களை சேர்த்து இணையதளத்தில் வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டுள்ளார் என பாஜகவினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!
விமான நிலைய சம்பவம்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் கடந்த 13-ஆம் தேதி மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அமைச்சர் பிடிஆர் காரை முற்றுகையிட்ட பாஜகவினர் அவரது காரில் காலணியை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலை ஆடியோ
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியிலிருந்து விலகினார். அமைச்சர் பிடிஆர் மீது காலணி வீசி, அசம்பாவிதம் நடக்க சதி செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திட்டமிட்டு அரசியல்
அமைச்சர் காரில் காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன், மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் காரில் காலணி வீசப்பட்ட சம்பவம் அண்ணாமலையின் சதி என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.
எடிட் செய்த ஆடியோ
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனும் பேசியதாக பரவும் ஆடியோ போலி என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது. விஷமிகள் சிலர் அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், அந்த ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல. நான் அதுபோன்று பேசவில்லை. நான் பேசாத ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது. என் குரலை சோதித்து பாருங்கள். அது என் குரலே அல்ல. அது யார் குரல் என்பதை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
டப்பிங், மிமிக்ரி, எடிட்டிங்
இந்நிலையில், ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு தனக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில், "சமூக வலைதளத்தில் நானும், எங்கள் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பேசியதாக டப்பிங், மிமிக்ரி, எடிட்டிங் செய்து, சில தகவலை ஊடகத்தில் பதிவிட்டு விவாதமாக்கி உள்ளனர். என் மீதும், மாநிலத் தலைவர் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.
சரவணனுக்கு மிஸ்டு கால்
வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு கடந்த 13-ஆம் தேதி அஞ்சலி செலுத்த மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் இருந்து வந்தார். மதுரை ரிங் ரோட்டில் அவரை வரவேற்றேன். என்னை அவரது காரில் ஏற்றிக் கொண்டார். விமான நிலையம் நோக்கி சென்ற போது, முன்னாள் பாஜக தலைவர் சரவணன் மாநிலத் தலைவர் போனிற்கு மிஸ்டு கால் கொடுத்தார். அவரது நேர்முக உதவியாளர் பிரபா போனில் பேச சொல்லி விவரம் கேட்டார்.
சரவணன் தான் சொன்னார்
அப்போது, ஓபன் மைக் போட்டு, மாநில தலைவர் பேசும்போது, எதிர் முனையில் பேசிய சரவணன் தானும், நிர்வாகிகளும் விமான நிலையம் வந்துவிட்டோம் என்றார். பிறகு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், என்னை நோக்கியும், பொதுமக்களை பார்த்தும் உங்களை யார் அனுமதித்தது. வெளியே போங்க என்றும், மாநிலத் தலைவர் வருகிறார் என்றபோதிலும், அவருக்கு யார் அனுமதி கொடுத்தது எனவும் அமைச்சர் கூறியதாக சரவணன் தெரிவித்தார்.
மீண்டும் அழைத்தார்
அப்படியானால் நீங்கள் அஞ்சலி செலுத்துங்கள் என மாநிலத் தலைவர் கூறினார். அப்போது, போனை ஆஃப் செய்யாமல், லட்சுமணன் வீட்டுக்கு சென்று அஞ்சலி நாம் செலுத்துவோம் என என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். இதற்கிடையில் சரவணன் மீண்டும் போனில் பேசி, அங்கு வேண்டாம் அனுமதி வாங்கிவிட்டேன். நீங்கள் இங்கு வந்தால் அஞ்சலி செலுத்தி விடலாம்" என அழைத்தார்.
அரசியல் பண்ணுவோம்
அப்போது, அமைச்சர் தியாகராஜன் உண்மைத் தன்மையை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அவரது பொய்யான முகத்திரை காட்டி, வேறு லெவலில் அரசியல் பண்ணுவோம் என மாநிலத் தலைவர் கூறினார். இதன்பின் நானும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும் விமான நிலையம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினோம்.
போனில் பேசவே இல்லை
வெளியில் என்ன நடந்தது என தெரியாது. எவ்விடத்திலும், நானும், மாநிலத் தலைவரும் போனில் உரையாடவில்லை. அவருடன் செல்லும்போது போனில் பேசியதாக கூறுவது உணமைக்கு புறம்பானது. மக்கள் பணி செய்யும் தலைவர்களை அசிங்கப்படுத்தி, அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே போன் உரையாடலை டப்பிங், மிமிக்ரி செய்து ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் களில் பரப்பி குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
சரவணன் சதி
எனது அலைபேசி எண், மாநில தலைவர், அவரது உதவியாளர், சரவணன் ஆகியோர் அலைபேசி எண்களை ஆய்வு செய்தால் உண்மை தெரியும். சரவணன் வேண்டுமென்றே சதி செய்து, ஆட்களை சேர்த்து இணையதளத்தில் வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். குற்றச் செயல் புரிந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.