1000 பொங்கல் பானைகள்... காளைகளுடன் பொங்கல் கொண்டாடும் பாஜக - ஜன.12ல் மதுரை வரும் பிரதமர் மோடி
மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: பாஜக சார்பில் மதுரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மோடி பொங்கல் என்ற பெயரில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி மதுரை வரவுள்ளதாக உள்ளதாக பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் 4 நாட்கள் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடைபெறும். இந்த பொங்கல் பண்டிகையைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக பாஜக சார்பில் மோடி பொங்கல் நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பாரத பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்த பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாக் மேல் ஷாக்.. முதலில் பெரியவர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. கிலி தரும் தொற்று.. கதறும் வல்லரசு
மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்கும் மோடி
ஜனவரி 12 ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் தமிழகம் வர இருக்கிறார்.
மோடி பொங்கல்
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஜனவரி 12 பொங்கல் விழா நடைபெறுகிறது. மோடி பொங்கல் பெயரில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சிறப்பான வரவேற்பு
1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெறுகிறது. 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் ஹெலிகாப்டர் மூலம் விருதுநகரில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார்.
12 பேர் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை
தமிழக பாஜக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான குழுவில் இடம்பெற்றுள்ள 12 பேரின் பட்டியலையும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் கொண்ட வரவேற்பு குழுவின் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்.
ராகுல்காந்தி வருகை
கடந்த ஆண்டு மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையில் ராகுல்காந்தி பங்கேற்றார். அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட்ட ராகுல்காந்தி திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல்விழாவில் பங்கேற்றார். பச்சரிசி சர்க்கரை போட்டு பொங்கல் வைத்து மக்களுடன் சேர்ந்து விருந்து சாப்பிட்டார் ராகுல்காந்தி. இந்த ஆண்டு மதுரையில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.