மதுரையில் வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை - ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் அறிவுரை
மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோய் உள்ளோரை பாதிக்கும் கருப்பு பூஞ்சை தொற்றால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரைக்கும் மதுரை மாவட்டத்திள் 50 பேர் பாதி
மதுரை: கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோய் உள்ளோரை பாதிக்கும் கருப்பு பூஞ்சை தொற்றால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரைக்கும் மதுரை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
நாடு முழுவதும் பரவிவரும் கொடிய கொரோனா நோயினால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொத்து கொத்தாக உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் 'மியூக்கோர்மைகோசிஸ்' என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
கலங்கடிக்கும் கருப்பு பூஞ்சை.. அறிகுறிகள் என்ன? யாருக்கு பரவ வாய்ப்பு அதிகம்? இதோ எய்ம்ஸ் கைட்லைன்
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு சிகிச்சையின் காரணமாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு அமைதியாக உயிரை பறிக்க கூடியது என்ற அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
அறிகுறிகள் என்னென்ன
தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், எனவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா உடன் கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் சவுந்தர் ராஜன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்துள்ளார்.
அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை தொற்று யாருக்கு, எப்படி ஏற்படுகிறது என்பது குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண் சீரமைப்பு, கண் புற்றுநோய் துறைத் தலைவர் மருத்துவர் உஷா கிம் விளக்கியுள்ளார்.
நோய் பாதிப்பு அதிகரிப்பு
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இந்த பாதிப்பு உள்ளவர்கள், வருடத்திற்கு சராசரியாக எத்தனை பேர் வருகிறார்களோ அதே எண்ணிக்கையில் தற்போது ஒரு வாரத்திற்கு வருகிறார்கள். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஏற்படுகிறது. ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர்.
மருத்துவர்களின் அறிவுரை
கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகள் கொரோனாவிலிருந்து மீண்டு வர உதவும் என்றாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். எனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகும் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
கருப்பு பூஞ்சையை குணமாக்கலாம்
கருப்பு பூஞ்சைத் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிறப்பு மருத்துவரை அணுகினால் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். காது, தொண்டை, கழுத்து சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்களால் இந்நோயை குணப்படுத்த முடியும்.
கண் மருத்துவர் உஷா
உடலில் ரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின்றி எந்த மருந்தையும் நிறுத்தக் கூடாது. சர்க்கரை நோயாளிகள், கொரோனா நோயிலிருந்து தற்காத்து கொள்ள எப்போதும் முகக்கவசம் அணியவும். தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவும். அடிக்கடி கை கழுவ வேண்டும் என்றும் கண் மருத்துவர் உஷா கூறியுள்ளார்.
தவிர்ப்பது நல்லது
வாலு போயி கத்தி வந்தது என்ற கதையாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மருந்தினால் கொரோனா குணமானாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது. எனவே கொரோனாவோ, கருப்பு பூஞ்சையோ வந்த பின்னர் மருத்துவமனைக்கு அலைவதை விட வரும் முன் தவிர்ப்பதே நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.