திருப்புவனம் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு! நிகிதா நகை திருட்டு புகார் வழக்கை கையில் எடுத்தது சிபிஐ
மதுரை: விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சிபிஐ புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐகோர்ட் கிளை உத்தரவின்படி, நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கையும் சிபிஐ கையில் எடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த மாதம் 28 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா , ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 4 முறை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, போலீசார் 5 பேருக்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சிபிஐ வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சிபிஐ நேற்று அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்தது.
நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சிபிஐ இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications