குழந்தை நாக்குக்கு பதில் பிறப்புறுப்பில் ஆபரேஷன் என்பது தவறான தகவல்! மதுரை மருத்துவமனை டீன் விளக்கம்
மதுரை: மகனுக்கு நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, பிறப்புறுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துவிட்டதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மீது சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆபரேசன் செய்தது ஏன் என்று அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கே.கே.நகர் காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார்,23. இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு கவின் என்ற குழந்தை உள்ளது. ஒருவயதான குழந்தைக்கு நாக்கு பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த வருடம் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை கவினுக்கு நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறு பரிசோதனைக்காக அவர்கள் கடந்த 21ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் குழந்தையைக் கொண்டு வந்தனர்.

அறுவை சிகிக்சை
அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை நாக்கில் செய்வதற்கு பதிலாக பிறப்புறுப்பு பகுதியில் செய்துவிட்டதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை அஜித்குமார் மதுரை அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார்.

தந்தை புகார்
அந்தப் புகாரில், என்னுடைய மகனுக்கு நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, மீண்டும் என் மகனை அழைத்துச் சென்று நாக்குப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்தனர். எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

சிறுநீர் கழிப்பதில் சிக்கல்
செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தந்தை அஜீத்குமார், எனது மகனுக்கு நாக்கில் பிரச்சினை இருந்தது. ஆபரேசனுக்காக சேர்த்திருந்தோம். ஆனால் அவனுக்கு பிறப்புறுப்பு பகுதியில் ஆபரேசன் செய்து விட்டனர். இதனால் அவன் சிறுநீர் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

மருத்துவமனை டீன் விளக்கம்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், குழந்தை கவினுக்கு வாய்க்குள் நாக்கு ஒட்டிக்கொண்ட பிரச்சினை இருந்தது. இதனால் அந்தக் குழந்தைக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டான். இந்நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சைக்காக 2 தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தை சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

ஆபரேசன் செய்தது ஏன்
குழந்தையின் சிறுநீரக பகுதியில் முன்தோல் குறுக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால், மற்றொரு மயக்க மருந்தைத் தவிர்ப்பதற்காக ஒரே அமர்வில் விருத்தசேதனம் மற்றும் நாக்கு ஒட்டுதல் ஆகியவற்றிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்றாக இருக்கிறது. உணவு சாப்பிடுகிறது. சிறுநீர் கழிக்கிறது. குழந்தையின் உடல் நலம் சீராக இருக்கிறது என தெரிவித்தார்.

மருத்துவர்கள் மீது எழும் புகார்கள்
தவறான அறுவை சிகிச்சை காரணமாக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களை பிரச்சினையில் சிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் ஒரு வயது குழந்தைக்கு நாக்கு பகுதியில் ஆபரேசன் செய்ததற்கு பதில் சிறுநீரக பகுதியில் ஆபரேசன் செய்ததாக மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications