முறையான திட்டமிடல் இல்லை..தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே காரணம்..பழனிவேல் தியாகராஜன் தாக்கு
மதுரை: கடந்த மூன்று மாதங்களில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாட்டில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட மத்திய அரசு தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி பதவி ஏற்பு முடிந்து மதுரைக்கு வந்த முதல் நாளிலிருந்து நானும் அமைச்சர் மூர்த்தியும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

குறையும் கொரோனா பாதிப்பு
கடந்த மூன்று வாரங்களில் மதுரையில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளுக்குப் பற்றாக்குறை இருந்தது. எங்கள் அறிவுரைகளைக் கேட்டு, அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகக் குறுகிய காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவமனைகளில் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

கருப்பு பூஞ்சை மருந்து
மத்திய அரசின் உத்தரவில்லாமல் கருப்பு பூஞ்சை மருந்துகளைக் கொள்முதல் செய்ய முடியாது. அந்த மருந்துகள் மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து மதுரையில் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தேவையான தகவல்களைத் திரட்டி முறையாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து ஆக்ஜிசன் கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. கூடுதல் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களை நியமனம் செய்யப்பட்டனர். தற்போதும் இந்த முழு ஊரடங்கைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றினால் இன்னும் விரைவாக இரண்டாவது அலை கட்டுப்பாட்டிற்குள் வரும்" என்று தெரிவித்தார்.

கொரோனா உயிரிழப்புகள்
இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்த அவர், "இதற்கான தகவல் இருந்தால் அவர் அளிக்கட்டும். கொரோனா இறப்பைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன். இது குறித்து நான் வழக்கே தொடர்ந்துள்ளேன். கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டில் 200 பேர் மட்டும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இரண்டே இரண்டு மயானங்களில் 1400 பேருக்கு இறுதிச் சடங்கு நடந்தது. இப்படி தரவுகள் எதாவது இருந்தார் அவர் கூறட்டும். தேவையான நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்

அத்திவாசிய பொருட்களின் விலை
அத்திவாசிய பொருட்களின் விலை குறித்துப் பேசிய அவர், "பொதுவாகவே ஊரடங்கு காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் . அதைத் தடுக்க அமைச்சர் மூர்த்தி தனிக்கவனம் செலுத்தினார். அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறையும் விலை ஏற்றமும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்தோம். ஆனாலும், சில விஷயங்கள் தவறு நடந்த பிறகு தான் திருத்திட முடியும். சமீபத்தில்கூட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

மத்திய அரசுதான் காரணம்
மேலும், தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்துப் பேசிய அவர், "மதுரையில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதற்குக் காரணம் மத்திய அரசு தான். அமெரிக்கா 8 கோடி தடுப்பூசிகள் கூடுதலாக வைத்து உள்ளாது. அதனைத் தமிழகத்திற்குக் கொண்டு வரும் முயற்சியில் நானும் பங்கெடுத்தேன்.

செங்கல்பட்டு தொழிற்சாலை
உலகத்திலேயே மருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியா, தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. முறையான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மத்திய அரசின் நிர்வாக குறையைத் தான் காட்டுகிறது.செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையைக் குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என அவர் குறிப்பிட்டார்.

இணக்கமான போக்கு
தொடர்ந்து மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் தேவையான நிதி மற்றும் திட்டங்களைப் பெற முடியாவதில்லையா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஜனநாயக நாட்டில் மத்திய-மாநில அரசின் இணக்கம் என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் இல்லை. இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும். மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை. அதனை விடுத்து அரசியல் செய்யவா ஒன்றிய அரசு இருக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications