வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று - என்ன வகை என ஆய்வு
வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி மிகக்குறைவாக நாள் ஒன்றிற்கு 22 என பதிவானது. தற்போது படிப்படியாக ஏறிக்கொண்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை மற்றும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பெரிய நகரங்களை தற்போது பல்வேறு இடங்களில் தினசரி ஒன்று இரண்டு பாதிப்புகள் என பதினேழு மாவட்டங்களில் நேற்றையதினம் பதிவாகின.
பொதுமக்கள் இந்த நேரத்தில் கொரோனா முடிந்து விட்டது, இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும். அதனை தலைதூக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு இருந்த நிலைமாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை பரவியுள்ளதாக கூறினார்.
இதனிடையே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்தமாதிரியான கொரோனா என்று பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications