கொரோனா தீவிரம் எதிரொலி- மதுரையில் ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை மீண்டும் முழு லாக்டவுன்
மதுரை: கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் ஜூன் 24-ந் தேதி அதிகாலை முதல் ஜூன் 30-ந் தேதி வரை மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா அதி உச்சமாக பரவுவதால் 12 நாட்கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.
சென்னை லாக்டவுன் அறிவிப்பால் திடீர் மாற்றம்.. பல மாவட்டங்களில் பரவிய கொரோனா.. ஷாக் பின்னணி
மதுரையில் முழு லாக்டவுன்
இந்நிலையில் மதுரையில் நாளை மறுநாள் ஜூன் 24-ந் தேதி அதிகாலை (23-ந் தேதி நள்ளிரவு) முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு , மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.
ஜூன் 28-ல் தீவிர லாக்டவுன்
இதனைத் தொடர்ந்து மதுரையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் வரும் 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எந்த ஒரு கடைகள் எதுவும் திறக்காமல் முழு அளவிலான தீவிரமான லாக்டவுன் கடைபிடிக்கப்பட இருக்கிறது. அன்று பொதுமக்கள் வெளியில் நடமாடவும் கூடாது.
ஜூன் 29,30-ல் வங்கிகள் மூடல்
மேலும் மதுரையில் ஜூன் 29,30 தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படாது. அதேபோல் மதுரையில் டீ கடைகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் என அனைத்து போக்குவரத்தும் முடக்கப்படும். கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும்.
பகல் 2 மணிவரை மட்டுமே கடைகள்
ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். வீடுகளில் இருந்து 1 கி.மீ சுற்றளவில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும்.
33% பணியாளர்களுடன் அலுவலகங்கள்
ரேசன் கடைகளும் காலை 8 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே இயங்க வேண்டும். அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 33% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.