"3வது ஸ்டேஜ்?" நாம பயந்தது நடக்க ஆரம்பித்து விட்டது.. இனிதான் கவனம் தேவை.. சமூக விலகல் கட்டாயம்!
மதுரை நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது
சென்னை: எது நடக்ககூடாது என்று பயந்தோமோ அதுதான் நடந்துள்ளது.. கொரோனாவின் 3வது கட்டத்துக்குள் நுழைந்து விட்டோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. எதை மனசில் வைத்து கொண்டு சமூக விலகல் தேவை என வலியுறுத்தப்பட்டதோ, அது அத்தனையும் சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது மக்களே.. சமூக விலகலை தயவுசெய்து கையில் எடுங்கள்!
Recommended Video
சமூக விலகல்.. யாரும் யாரையும் தொடக்கூடாது.. சுமார் 1 மீட்டர் தூரம் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.. இதற்கு பெயர்தான் சமூக விலகல்! கூட்டம் கூட்டமாக மக்கள் கூடக்கூடாது என்பதால் இந்த விதிமுறை வலியுறுத்தப்பட்டது.. இந்த விதிமுறைகள்தான் தற்போது காற்றில் பறக்கிறது!
ஈரோட்டில் ஒரு டாஸ்மாக் கடையில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு ஒரு வெள்ளை கலரில் கோடு போட்டு அதற்குள் குடிமகன்கள் வரிசையில் நின்று சமூக விலகலை கடைப்பிடித்தனர்.. ஆனால் 144 தடை உத்தரவு இன்று மாலை முதல் என்ற அறிவிப்பு வந்ததால், நேற்று பஸ் நிலையங்களில் கூடிய கூட்டம் மனதை அதிர வைத்தது. இங்கும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை.
அதேபோல, ஊருகளுக்கு செல்வோர் எல்லாம் பஸ் ஸ்டாண்டுகளில் குவிந்தனர்.. பஸ் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், எப்படியாவது அதில் ஏறி ஊர் போய் சேர்ந்துவிட வேண்டும் என்று முண்டியடித்து கொண்டனர்.. 144 உத்தரவால் இந்த நிலை ஏற்பட்டது. பஸ்ஸை பிடிக்கும் நோக்கத்தில், சமூக இடைவெளி என்ற சிந்தனையே மக்களுக்கு ஒரு செகண்ட் கூட நினைவுக்கு வரவே இல்லை.
அதேபோல, சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது... ஒரு சில கடைகளில் கடை ஓனருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம், தகராறு கூட ஏற்பட்டது.. முக்கிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடனும் திரும்பி சென்றனர்.
நகரத்தில் பரவாயில்லை.. அத்தியாவசிய பொருட்களுக்காக கடைகள் திறந்திருக்கலாம்.. ஆனால் புறநகர் பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறைதான் வழக்கமாகவே மக்கள் பொருட்களை வாங்குவார்கள்.. இவர்கள் நிலைமைதான் சிக்கல்.. அதனால்தான் கடைகளில் நெருக்கி தள்ளிக் கொண்டு பொருட்களை வாங்க திரண்டு வருகின்றனர்.. சில கடைகளில் கைகலப்பு வரையும் சென்று கொண்டிருக்கிறதே தவிர, சமூக விலகல் என்ற விஷயம் காதிலே கூட அவர்களுக்கு ஏறவில்லை.
அத்தியாவசிய பொருட்களான பால், மாஸ்க், சானிடைசர் போன்றவற்றுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.. இதைவிட பெரிய ஷாக் சில மெடிக்கல் ஷாப்களில் சானிடைசர் ஸ்டாக் இல்லை என்று நோட்டீஸ் போர்டே எழுதி வைத்து விட்டனர்.. அதனால் இன்னொரு கடைகளுக்கு சென்று கூட்டமாக கூடும் நிலை ஏற்படுகிறது.
144 உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கடைகளில் கிடைக்க செய்ய வேண்டும்.. பொதுமக்களுக்கு ஏமாற்றம் தராமல் இருக்க நடவடிக்கை தேவை.. அதேபோல மக்களும் விழுந்தடித்து கொண்டு கடைகளுக்கு செல்ல வேண்டியதில்லை.. ஊரடங்கு உத்தரவு என்றால்தான் பீதி வரவேண்டும், இது 144 உத்தரவு மட்டுமே.. பொருட்கள் கிடைக்கும்.. வீட்டு பொருட்களை வாங்கி விட வேண்டும் என்பதற்காக சமூக விலகல் என்ற கவசத்தை உடைத்து கொண்டு விடாதீர்கள்!
அதேபோல 144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறில்லை.. அந்த உத்தரவு இதுபோன்ற அவசர அவசிய நேரத்தில் முக்கியமானதும்கூட.. ஆனால் அதே சமயம் 144 பிறப்பிப்பது என்று தெரிந்துவிட்டால், அதற்கேற்றபடி பொதுமக்களுக்கு போதுமான பஸ் வசதிகளை அரசு இயக்கியிருக்க வேண்டும்.. கூடுதலாக பஸ்களை இயக்காமல், 144 தடை என்று சொல்லிவிடவும் மக்கள் என்னதான் செய்வார்கள்? முண்டியடித்து கொண்டு ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்பார்களே தவிர சமூக விலகல் என்ற விஷயத்தை பற்றி சிந்திக்கவும் தோன்றாது.. இன்றுகூட 3 பேர் பஸ் கிடைக்காமல் பைக்கில் போய் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் ஒருவருக்கு கொரோனா பரவியிலிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. அண்ணா நகரைச் சேர்ந்த இவர் எந்த வெளிநாடும் போகவில்லை... வெளி மாநிலத்திற்குக் கூட போகவில்லை. ஆனாலும் இவருக்கு வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் community spread.. அதாவது வெளியிலிருந்து வந்த நபர்களால் உள்ளூரில் உள்ள மக்களிடம் பரவுவது. இந்த மதுரைக்காரருக்கு யாரிடமிருந்து பரவியது என்று தெரியவில்லை... மேலும் அந்த நபருடன் தொடர்புடையவர்களுக்கும் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இனிமேல்தான் மக்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீடுகளுக்குள் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும்.
ஒரு வேளை மதுரை நபரைத் தாக்கிய கொரோனா வைரஸை சுமந்த நபர் நேரடியாக வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றால் இது 2வது கட்டமாக இருக்கும். ஒருவேளை அந்த நபருக்கு வேறு ஒருவரிடமிருந்து வந்திருந்தால் அது 3வது கட்டம். இதுதான் அபாயகரமானது. இது வரக் கூடாது என்றுதான் அனைவரும் பதறிக் கொண்டுள்ளனர். இதை மக்கள் இப்போதாவது உணர வேண்டும். இதை அசால்ட்டாக எடுத்து கொள்வே கூடாது. அஜாக்கிரதை இந்த விஷயத்தில் மட்டும் வந்துவிட்டால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். சமூக விலகல் என்பது நமக்கு உடனடி அவசியம் மக்களே.. ப்ளீஸ்.. சீரியஸான கட்டத்தில் உள்ளோம்.. இந்த ஆபத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.. சமூக விலகலை தயவு செய்து கையில் எடுங்கள்!