திமுக தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு... நாங்கள் தான் நல்ல நோட்டு... ஒ பன்னீர்செல்வம் கலகல பன்ச்
மதுரை: திமுகவின் தேர்தல் அறிக்கையைக் கள்ள நோட்டு என்று விமர்சித்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பார் ஒ பன்னீர்செல்வம், ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் பன்ச் வசனம் பேசியுள்ளார்.
அடுத்த வாரம் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை ஐயர் பங்களா பகுதியில் தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

ஓபிஎஸ் பேச்சு
அப்போது பேசிய ஒ பன்னீர் செல்வம், "அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் எதிர்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டதாகும். தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களில் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்தவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்கு இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டுக்குள் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

கள்ள நோட்டு - நல்ல நோட்டு
கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறைவேற்றவில்லை. இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்றார்கள். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு. ஆனால் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நல்ல நோட்டாகும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் செயல் படுத்துவோம்.

அதிமுக வாக்குறுதிகள்
16 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,000 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளோம். சுய உதவிக் குழுவினர் பெற்றுள்ள கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தாய்மார்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விலையில்லா வாஷிங்மிசின் திட்டத்தையும் செயல்படுத்துவோம். ஆண்டிற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

அதிமுக சாதனை
கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வெறும் 45 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகளை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு 6 லட்சத்து 87 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகள் உருவாக்கியுள்ளது. அதில் 19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மத்திய அரசின் விருதுகளையும் தமிழக அரசு பல முறை வென்றுள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்காக 16 வகையான கல்வி உபகரணங்களைத் தமிழக அரசு வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தேசிய அளவில் இது வெறும் 24 சதவீதம் தான்" என்று பேசி அவர் வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications