திருவாரூர் தேர்தல் ரத்து.. மத்திய அரசுடன் ஆலோசித்தீர்களா? தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி
மதுரை:திருவாரூர் தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாமல்.. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் வலியுறுத்தலை தொடர்ந்து, திருவாரூர் இடைத்தேர்தலை கடந்த 7-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
தேர்தல் ஆணையம் கடிதம்
இது தொடர்பாக தேர்தலை ஆணையம் விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில், கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே திருவாரூர் உட்பட 19 தொகுதிகளுக்கும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியிருந்தார் என்று கூறியது.
அரசியல் கட்சிகள் வேண்டுகோள்
தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக அவர் கடிதம் எழுதி இருந்தார். அதனை கருத்தில் கொண்டும், திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ததாக தேர்தலை ஆணையம் கூறியது.
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்நிலையில் திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அனுமதி தந்ததா?
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததா..? மேலும் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. ஆனால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா என்று கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தில் விளக்கம்
இதையடுத்து கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாக கட்சி தலைவர்கள் கூறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இந்த வழக்கு தொடர்பான பதில் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.