அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யக் கூடாது... பாஜகவுக்கு பிரேமலதா அட்வைஸ்
மதுரை: ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதில் பாஜகவுக்கு அறிவுரை கூறும் வகையில் அமைந்திருந்தது.
மேலும், கூட்டணிக் கட்சியான பாஜகவின் செயல்பாடு தொடர்பாக பிரேமலதா தெரிவித்துள்ள கருத்து முக்கியமானதாக கருதப்படுகிறது.
பாஜகவுக்கு அட்வைஸ்
தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்றிருந்த பிரேமலதா விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மஹாராஷ்டிரா அரசியல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பளீரென பதில் தந்த பிரேமலதா விஜயகாந்த், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது எனத் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வரலாம்
பாஜக பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்றும், மக்கள் அனைத்தையும் கவனித்து வருவதாகவும் கூறினார். நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பது தான் தனது விருப்பம் எனத் தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
குழு அமைப்பு
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் கேட்பீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரட்டும், அதன் பிறகு அது பற்றி எங்கள் கட்சியில் அமைக்கப்பட்டுள்ள குழு அதிமுகவிடம் பேசி முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.
யார் அவர்?
முன்னதாக காலையில் தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் என்பவர் அமைச்சராக இருக்கிறாரா? என்றும், அவர் அமைச்சரவையில் இருப்பதே தமக்குத் தெரியவில்லையே என்றும் கலாய்த்தார். இதனிடையே விஜயகாந்த் பற்றி அமைச்சர் பாஸ்கரன் கடந்த வாரம் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.