பல ஆயிரம் பேர்.. குவிந்த மக்கள்.. தென் மண்டலத்திலேயே பவரை காட்டிய எடப்பாடி.. அதிரும் பாஜக.. ஓபிஎஸ்!
மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக கூட்டம் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபித்து உள்ளார். முக்கியமாக கடந்த சில மாதங்களாக முடங்கி இருந்த அதிமுக தென் மண்டலத்தில் கூட்டத்தை சேர்க்க முடியும் என்று நிரூபித்துள்ளது.
மதுரையில் அதிமுகவின் பிரம்மாண்ட எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.

இன்னும் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் பேச இருக்கிறார். 63 ஏக்கரில் பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. மூன்று வேளை உணவுடன் மிக சிறப்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் கூட்டம்: கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாநாடு இது. எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் நடக்கும் முதல் மிகப்பெரிய மாநில மாநாடு இது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை, கொங்கு, தென் மண்டலங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இந்த எழுச்சி மாநாடு காரணமாக அதிமுக புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
தென் மண்டலம்: முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக முதல் முறையாக தன்னை பெரிய கட்சி என்று நிரூபிக்கும் வாய்ப்பு இந்த கூட்டம் மூலம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு பின் அதிமுக ஒரு கொங்கு மண்டல கட்சி என்று சுருங்கிவிட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக தென் மண்டலத்தின் மையமான மதுரையில் கூட்டம் நடந்து உள்ளது.
இந்த கூட்டத்தில் முக்குலத்தோர் அமைப்புகள் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் ஆர்.பி உதயகுமார் லாபி காரணமாக முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது கண்டிப்பாக அதிமுகவிற்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும்.
அண்ணாமலை - பாஜகவிற்கு சிக்கல்: பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டு வாரமாக அவர் மேற்கொள்ளும் பயணம் தற்போது கவனம் இழந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பயணத்திற்கான மக்கள் ஆதரவும் குறைந்துள்ளது. அண்ணாமலை கூட்டத்திற்கான மக்கள் ஆதரவு, பிரபலம் குறைந்து வரும் நிலையில்தான் மொத்தமாக போகஸை திருப்பும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் இந்த மாநாடு நடைபெற்று உள்ளது.
இன்னொரு அதிமுக மீண்டும் பலம் வாய்ந்த கட்சி, தமிழ்நாட்டில் முக்கியமான இரண்டாவது பெரிய கட்சி என்று நிரூபித்து உள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு குறைவான இடங்களை கொடுக்க அதிமுக நினைக்கும். அதிமுக தனது பவரை காட்டியதால் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை ஒதுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஓ பன்னீர்செல்வம் சிக்கல்: இந்த மாநாடு மூலம் பாஜக மட்டுமின்றி ஓ பன்னீர்செல்வத்திற்கும் அதிர்ச்சி கொடுக்கும். இனி ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிற்குள் நுழையவே முடியாத நிலை ஏற்படும். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தான் அதிகம் நம்பி இருக்கும் தென் மண்டலத்திலும் பவரை காட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஒரே கல்லில் பாஜக, ஓ பன்னீர்செல்வம் என்று இரண்டு தரப்பிற்கும் தனது பவரை காட்டி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் இந்த பொதுக்கூட்டம் காரணமாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஏற்பாடுகள் லோக்சபா தேர்தலுக்காக ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுகவும் விரைவில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications