இன்னைக்கு ஒரு புடி! "150 ஆடுகள், 500 கோழி.." முனியாண்டி கோவில் திருவிழாவில்.. ரெடியான கமகம பிரியாணி
ஸ்ரீ முனியாண்டி சுவாமியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் 150 ஆடுகள், 500 கோழிகளைக் கொண்டு பிரியாணியைச் சமைத்து அசத்தினர்.
மதுரை: மதுரை வடக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முனியாண்டி சுவாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்து சிறப்புப் பூஜைகள் செய்தனர். மேலும், 150 ஆடுகள், 500 கோழிகளைக் கொண்டு பிரியாணியையும் சமைத்து வழங்கினர்.
நீங்கள் எந்த ஊருக்குச் சென்றிருந்தாலும் அங்கு நிச்சயம் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பார்த்து இருப்பீர்கள். குறைந்த விலையில் அருமையான நான் வெஜ் உணவுகளைச் சாப்பிட முனியாண்டி விலாஸே முதல் சாய்ஸாக இருக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உரிமையாளர் இந்த ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இருப்பார்கள். சில ஹோட்டல்கள் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று கேஸ் போடுவதைப் போல எந்த ஸ்ரீ முனியாண்டி விலாஸ் உரிமையாளரும் போட மாட்டார்கள்.
பாஜக போட்டியிடாத பட்சத்தில்.. நிச்சயம் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார்.. ஜேசிடி பிரபாகர் சொன்ன பாய்ண்ட்
முனியாண்டி விலாஸ்
இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நம்மால் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பார்க்க முடியும். இந்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் வேறு வேறு நபர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் ஒரு கனெக்ஷன் இருக்கவே செய்கிறது. அதாவது இந்த இந்த ஹோட்டலை வைத்திருக்கும் பெரும்பாலான உரிமையாளர்களின் குலதெய்வமாக வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமியே இருக்கும். முனியாண்டியைக் கும்பிட்டே அவர்கள் ஹோட்டல்களை ஆரம்பிக்கிறார்கள்.
குலசாமி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் தான் ஸ்ரீ முனியாண்டி சுவாமியின் தாய் கிராமம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இங்கிருந்து பிடி மண் எடுத்தே ஆங்காங்கே ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாழ்வாதாரம் தேடிப் பல ஊர்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் குல சாமியான முனியாண்டியைக் கும்பிட்டு, முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகங்களை ஆரம்பிக்கிறார்கள்.
சிறப்புப் பூஜை
இப்படி நடத்தப்படும் உணவகங்கள் பெரும்பாலும் வெற்றிகரமாகவே இருந்து வருகிறது. அதாவது இந்த கோவிலை மனதில் கொண்டே முனியாண்டி விலாஸ் தொடங்கப்படுகிறது. தங்கள் வாழ்க்கையை காக்கும் இந்த முனியாண்டி சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முனியாண்டி விலாஸ் பெயரில் ஹோட்டல் நடத்துவோர் சிறப்புப் பூஜைகளைச் செய்வார்கள். இதனால் தமிழ்நாடு முழுக்க முனியாண்டி சுவாமி பெயரில் இயங்கும் ஹோட்டல்களுக்கு இந்த இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
ஒன்றிணைந்த மக்கள்
மதுரை வடக்கம்பட்டி கிராமத்தில் குடும்பத்தினருடன் ஒன்று கூடும் ஹோட்டல் உரிமையாளர்கள் சாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்வார்கள். அதன்படி இந்தாண்டும் அங்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்றிரவு தங்களது வீட்டில் இருந்து சுவாமிக்குப் பூஜை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சாமிக்கு அதைப் படைத்து வணங்கினர். இரண்டாம் நாளான இன்றும் பூஜைகள் தொடர்ந்தன.
150 ஆடுகள், 500 கோழிகள்
இரண்டாவது நாளான இன்று படையல் நடைபெற்றது. நேர்த்திக்கடனாகக் கொடுத்த 2,500 கிலோ அரிசி, 150 ஆடுகள், 500 கோழிகளைக் கிராமத்திலேயே பலியிட்டு நேர்த்திக்கடனாகக் கொடுத்தனர். மேலும், அதை வைத்து அங்குக் கிராமத்திலேயே பிரியாணியும் சமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இணைந்து இதைச் செய்ததால் ஒட்டுமொத்த ஊரே பிரியாணி வாசனையில் மூழ்கிப்போனது.
சுடசுட பிரியாணி
சுடசுட பிரியாணியைச் செய்து தங்கள் குலதெய்வமான முனியாண்டி சாமிக்குப் படையலிட்டனர். இந்த கிராமம் மட்டுமின்றி அண்டை கிராமங்களான கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கும் பிரசாதமாகப் பிரியாணி வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த ஊரே சேர்ந்து பிரியாணி சமைக்கும் இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.