பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்... பாய்ந்தது வழக்கு..!
மதுரை: பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மீது கந்துவட்டி புகாரின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கங்கைராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை அண்ணா நகர் போலீஸ் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதனிடையே தம்மை பழிவாங்கும் நோக்கத்தோடு அளிக்கப்பட்ட புகார் என சலூன்கடைக்காரர் மோகன் விளக்கம் அளித்திருக்கிறார்.

பிரதமர் பாராட்டு
கொரோனா ஊரடங்கு காலத்தில் மகளின் கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் உணவு வழங்கியதற்காக பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்றவர் மோகன். மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலியில் பேசிய பிரதமர் மோடி மதுரை சலூன்கடைக்காரர் மோகனின் செயல்பாட்டை பாராட்டி சிலாகித்து பேசியிருந்தார். இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் தமிழக செய்தி தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக வலம் வந்தார் மோகன்.

பாஜகவில் இணைந்தார்
பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்றதை அடுத்து மோகன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் மீது கங்கை ராஜன் என்பவர் கந்துவட்டி புகார் ஒன்றை எழுப்பியிருக்கிறார். மோகனிடம் தாம் வாங்கிய ரூ.30,000 கடனுக்கு வட்டியும் அசலும் திருப்பிக் கொடுக்கப்பட்டும் மேற்கொண்டு வட்டிப்பணம் கேட்டு நிர்பந்திப்பதாக மதுரை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகார் மீது நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ் பிரதமர் பாராட்டிய மோகன் மீது வழக்குப் பதிவு செய்தது.

பாஜக தலைமை அதிர்ச்சி
மோகன் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கட்சியின் இமேஜையும் , அவரை பாராட்டிய பிரதமர் மோடியின் இமேஜையும் பாதிக்கும் என்பதால் இந்த விவகாரத்தை அதிர்ச்சியுடன் பார்க்கிறது பாஜக மாநில தலைமை. இதனிடையே இனி வரும் நாட்களிலாவது பாஜகவில் புதிதாக இணைகிறேன் என வருபவர்களை அவர்களது பின்னணியை ஆராய்ந்து இணைக்க வேண்டும் என்ற குரல் பாஜகவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

சட்ட ரீதியாக
இதனிடையே தம் மீதான கந்துவட்டி புகார் தம்மை பழிவாங்கும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்டது என்றும் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்திருக்கிறார் மதுரை சலூன்கடைக்காரர் மோகன். கட்சியில் தனக்கு கிடைத்து வரும் நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மோகன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications