வழிவிடாத அரசுப் பேருந்து.. முந்திச் சென்ற கார்.. டிரைவரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்
மதுரை: மதுரையில் காருக்கு வழிவிடாமல் பேருந்தை ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநரை காரில் வந்த மர்மக் கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளது.
Recommended Video
இந்த காட்சிகள் பஸ் பயணிகளால் படம்பிடிக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அரசுப் பேருந்து ஓட்டுரை தாக்கிய மர்மக் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து.. ரிஷிவந்தியத்தில் பாமக போராட்டம்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம்
திருப்பூர் செல்லும் பேருந்து
மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கோச்சாடை வழியாக திருப்பூர் செல்வதற்காக மதுரை காளவாசல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பாதை சிறிது குறுகலானது என்பதால் ஓட்டுநர் குறைந்த வேகத்தில் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
வேகமாக வந்த சொகுசு கார்
அப்போது பேருந்திற்கு பின்னால் வந்த சென்னையை சேர்ந்த பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. பலமுறை ஹாரன் அடித்தும் பேருந்து ஓட்டுநர் வழிவிடாத காரணத்தினால் காரில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஹாரன் அடித்தது மட்டுமின்றி, தங்களுக்கே உரித்தான பாஷையில் ஓட்டுநரை தரக்குறைவாக பேசி உள்ளனர். சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றதை புரிந்து கொள்ளாத கார் ஓட்டுனர் ஒரு கட்டத்தில் பேருந்தை ஓவர்டேக் செய்து நிறுத்தினார்.
பேருந்து கண்ணாடி, ஓட்டுநர் மீது கல்வீச்சு
பின்னர் காரில் பயணம் செய்தவர்கள் பேருந்து ஓட்டுநரை அவதூறாக பேசி உள்ளனர். மேலும் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனர். கற்களை ஓட்டுநர் முத்துகிருஷ்ணன்மீதும் வீசியதால் அவர் காயம் அடைந்தனர். மர்மக் கும்பல் தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்களது செல்போனில் நிகழ்ந்தவற்றை படம்பிடித்தனர். இதையடுத்து பின்னால் வந்த மற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் காரில் வந்த கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கூடியதால் ஓட்டம்
பொதுமக்களும் ஒன்று சேர்ந்து ஓட்டுநருக்கு ஆதரவாக பேசினர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் அவசர அவசரமாக காரில் ஏறி தப்பிச் சென்றது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மக் கும்பல் தாக்கிய வீடியோ ஆதாரங்களை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து தற்போது எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.