பெற்றோர் தான் காரணம்.. ஆன்லைன் விளையாட்டுகள் சிறார்களுக்கு தெரிய வந்தது எப்படி? நீதிபதிகள் கேள்வி!
மதுரை : 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி விளையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது,

நெல்லையைச் சேர்ந்த ஐயா எனபவர் ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது.
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 18 வயதிற்கு கீழானவர்களுக்க்ய் ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? - பெற்றோர்களே அரசுக்கு உள்ளதை விட பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, போதிய அக்கறை காட்டுவதில்லை. அதனாலேயே இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன" என தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications