மற்றவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதுதான்.. சாட்டை துரைமுருகனின் வேலையா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
மதுரை: ஒருவர் தவறு செய்யத் துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, யூடியூப் தளத்திற்கு ஏன் முழுமையாகத் தடை விதிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துக்களைப் பேசி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு- 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு!
ஜாமீன்
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனச் சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், இனிமேல் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்தது.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசி வருகிறார் என்றும் இதன்பேரில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது
சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி பத்திரத்தை மீறிச் செயல்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி, அவர் மற்றவர்களை அநாகரிகமாக விமர்சனம் செய்வதையே வேலையாக வைத்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பியது. மேலும், யூடியூப் குறித்தும் அதில் வீடியோக்களை பதிவிடுவோர் குறித்தும் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
யூடியூப்பும் குற்றவாளி தான்
ஒருவர் தவறு செய்யத் துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று தெரிவித்த நீதிபதி புகழேந்தி, தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வதை கற்றுக் கொண்டதாக பல குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதி, அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது
இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "ஒருவர் தவறு செய்யத் துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளைத் தடை செய்ய வேண்டும்.
அரசுக்கு உத்தரவு
யூடியூப் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் அதைத் தடை செய்ய முடியாது என்றால், வெளி நாடுகளில் இருந்து தேவையற்ற பதிவுகளைத் தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? யூடியூப்பில் இதுபோன்ற சமூக விரோத வீடியோகளை பதிவிடுவோருக்கு என்ன சம்பளம். அவர்களின் சன்மானம் என்ன? இது குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களைச் சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறி வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.