கோடீஸ்வரராக ஆசை! மதுரையில் வசமாக சிக்கிய மூவர்! நகை பட்டறையில் ரூ.15 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்
மதுரை: மதுரையில் நகை பட்டறையில் திமிங்கல எச்சமான அம்பர் கிரீஸ் பதுக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆழ்கடலில் வசிக்கும் மிகப்பெரிய உயிரினம் திமிங்கலம். 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கங்கள் உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இது அம்பர் கிரீஸ் என அழைக்கப்படுகிறது.
சென்னையில் பயங்கரம்.. மரம் விழுந்து காரில் சென்ற வங்கி பெண் மேலாளர் பலி.. கால்வாய் பணி தான் காரணமா?
இது உயர்தர நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. அதோடு வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதைத் தடுக்க அம்பர் கிரீஸ் கட்டுப்படுத்துகிறது.
வெளிநாடுகளில் பயன்பாடு
இந்த அம்பர் கிரீஸ் எனும் எச்சமானது திமிங்கலத்தின் உடலிலிருந்து வெளியேறி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் என கூறுவதால் இது அரிய பொருளாக பார்க்கப்படுகிறது. அதோடு துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்பர் கிரீஸ் பார்ப்பதற்கு சற்றுஅருவருப்பாக இருந்தாலும், நெருப்பில் வாட்டினால் நறுமண வாசனை வெளியாகும்.
வனத்துறைக்கு ரகசிய தகவல்
இந்த அம்பர் கிரீஸ் மூலம் தயாரிக்கப்படும் வாசனை திரவியம், மிகவும் விலை உயர்ந்தது. எனவே திமிங்கலத்தின் ஒரு கிலோ எச்சம், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த நிலையில் மதுரைக்கு சுமார் 10 கிலோ மதிப்புடைய திமிங்கல எச்சம் கடத்தி வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
11 கிலோ எச்சம் பறிமுதல்
இதன் அடிப்படையில் மதுரை தெற்கு மாசி வீதி சின்னக்கடை தெருவில் உள்ள ஒரு நகை பட்டறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ திமிங்கலம் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நகை பட்டறையில் இருந்த மஞ்சன கார தெருவைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ராஜாராம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சுந்தரபாண்டி, சிவகங்கை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திட்டம் தான் என்ன?
இதனைத்தொடர்ந்து கைது செய்த 3 பேரையும் மதுரை மண்டல வனத்துறை அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரனை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் சில புரோக்கர்கள் மூலமாக திமிங்கலத்தை இவர்கள் வாங்கியதும் நகை வியாபாரிகள் மூலமாக வெளிமாநிலத்தில் இருந்து வெளிநாடு கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
ரூ.15 கோடி மதிப்பு
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து உள்ள வனத்துறை மற்றும் காவல்துறை அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. மதுரையில் 15 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கல எச்சத்தை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.