உடம்பை காட்டி ஆபாச டான்ஸ் கூடவே கூடாது! கோவில்களில் ஆடல் பாடல் இரவு 10 மணியோடு ஓவர்- ஹைகோர்ட் அதிரடி
மதுரை: கோயில் திருவிழாக்களின்போது நடத்தப்படும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இரவு 10 மணிக்குள் முடித்துவிட வேண்டும் - ஆபாச நடனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.
கிராமப் புறங்களில் உள்ள கோயில்களில் திருவிழாவின்போது, பொதுமக்களை கவரும் வகையில் ஆடல், பாடல், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகளில், சில நேரம் கட்டுப்பாடுகளின்றி ஆபாசம் நிறைந்ததாக இருக்கும்.
இதுபோன்ற நடனங்கள், நிகழ்ச்சியை பார்வையிடும் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் அளவில் இருக்கும். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார்களும் குவிந்துதான் வருகிறது.

ஆபாச நடனங்கள்
மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சிகளை முடிக்காமல், நீண்ட நேரம் நடத்தப்படுவதும் உண்டு. மேலும், சில அரசியல் மற்றும் சாதி தொடர்பான விமர்சனங்களால், மோதல் போக்கும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இதனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டும் வருகின்றன. எனினும், நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரின் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி, கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்கள் அரங்கேறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நீதிமன்றத்தில் மனுக்கள்
இந்நிலையில், திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோவில் திருவிழாக்களில் இரவு நேரத்தில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உயர்நீதிமன்ற நீதிபதி சக்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் திருவிழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

அதிரடி கட்டுப்பாடுகள்
அதன்படி, கோவில் திருவிழாவின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி அல்லது மதத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளெக்ஸ் போடுகள் வைக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களையோ, மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது.

10 மணிக்குள் முடிக்க வேண்டும்
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டு என அதிரடியாக உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரீகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. அரசியல், மதம், சமூகம், சாதி உள்ளிட்டவற்றை குறித்து பாடல்களோ, நடனமோ இருக்கக்கூடாது என கடுமையான உத்தரவுகளை நீதிபதி பிறபித்தார்.












Click it and Unblock the Notifications