"ஐடிதாவணியாகும்.. மாட்டுத்தாவணி".. மதுரைக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ஸ்டாலின்.. வருகிறது டைடல் பார்க்
மதுரை: மதுரையில் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக மதுரைக்கு சென்றுள்ளார். நேற்று மதுரையில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் திமுகவின் முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் மதுரையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான தென் மண்டல மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சமீபத்தில் திருப்பூர் மற்றும் கோவையில் நடந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று மதுரையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மதுரை மாநாடு
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும். பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.

தூத்துக்குடி
சமீபத்தில் தூத்துக்குடியில் தொழித்துறை சார்ந்த மாநாடு நடத்தப்பட்டது. இப்போது மதுரையில் மாநாடு நடக்கிறது. இதனால் தென் தமிழ்நாடு வேகமாக முன்னேற்றம் அடையும். மதுரையில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது. மதுரை சுங்கடி சேலைகள், மதுரை ஆயத்த ஆடைகள், அப்பளம் ஆகியவை பிரபலம் ஆனது. இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

புவிசார் குறியீடு
தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் தென் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 18 பொருட்கள் புவி சார் குறியீடு பெற்றுள்ளன. இது நமக்குத்தான் பெருமையை சேர்க்க கூடியது. மதுரையில் உற்பத்தி ஆகும் பொருட்கள் பல உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை நாம் அதிகரிக்க வேண்டும். இங்கே ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் நிறுவனங்கள் மென்மேலும் வளரவும், இந்தியாவில் உயர் நிறுவனங்களாக மாறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டைடல் பார்க்
இந்த நிலையில் மதுரையில் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications