அங்க கொடுத்தாரு பாருங்க ஒரு அழுத்தம்.. ‘விமான நிலைய பாதுகாப்பில் குளறுபடி?’ - சிண்ட்ரெல்லா வருவாரா?
மதுரை : மதுரையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீதான செருப்பு வீச்சு சம்பவத்தில் இன்று ஒரு அதிரடி ட்வீட்டை பதிவிட்டுள்ளார் பிடிஆர்.
அதில், விமான நிலைய பாதுகாவலர்களையும் மறைமுகமாகச் சாடியுள்ளார் பிடிஆர். விமான நிலையத்தின் 'பாதுகாக்கப்பட்ட' எல்லைக்குள் 'அனுமதிக்கப்பட்ட' சிண்ட்ரெல்லா எனக் குறிப்பிட்டுள்ளார் பிடிஆர்.
எனது கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது, தேவைப்பட்டால் வந்து பெற்றுக் கொள்ளவும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
பாஜகவினரின் கூட்டத்திலிருந்தே செருப்பு வீசப்பட்டிருந்தாலும், செருப்பை வீசியது தாங்கள் இல்லை என பாஜகவினர் மறுத்து வரும் நிலையில், செருப்பை வீசியவர்களோ, இந்தச் செருப்பு வீச்சு சம்பவத்தால் மகிழ்ந்தவர்களோ தைரியம் இருந்தால் வந்து வாங்கிக் கொள்ளலாம் என சவால் விடுக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
அது புரோட்டோகால்.. நான்தான் தப்பா புரிஞ்கிட்டேன்.. பிடிஆர் வெளிநாட்டில் படிச்சவர்.. மதுரை சரவணன்
அமைச்சர் காரில் ஒற்றைச் செருப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த திருமங்கலம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். புரோட்டோகால் படி அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவதாகவும், கட்சி சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால் ராணுவ வீரரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் பிடிஆர் கூறியதால் அவரது கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது.
பாஜகவினர் கைது
இச்சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட துணைத் தலைவர் உட்பட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் 28ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமைச்சரின் கார் மீது காலணி வீசிய பாஜக பெண் நிர்வாகி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சி பேதமின்றி கண்டனம்
இந்தச் சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் பபோராட்டம் நடத்தியதோடு, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையையும் பல இடங்களில் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திமுக அமைச்சர்கள் தொடங்கி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்திரமா இருக்கு
இந்த நிலையில், தனது காரில் வந்து விழுந்த காலணியின் புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார். அதில், "நேற்று என் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பேச ஏராளம் உள்ளது. அதை பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு, மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த சிண்ட்ரெல்லாவின் ஒற்றைச் செருப்பு பத்திரமாக உள்ளது. அது உங்களுக்கு தேவைப்பட்டால் வந்து வாங்கிச் செல்லலாம், என்னுடைய உதவியாளர் அதை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவினருக்கு அறைகூவல்
அமைச்சர் காரில் செருப்பு வீசியது நாங்கள் அல்ல என பாஜகவினர் மறுத்து வரும் அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தனது ட்வீட்டில், காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை வாங்கிச் செல்லுமாறு அமைச்சர் பிடிஆர் கூறியிருப்பதன் மூலம், செருப்பை வீசியவர்களோ, செருப்பு வீசிய சம்பவத்திற்கு ஆதரவு அளித்தவர்களோ தைரியம் இருந்தால் வந்து செருப்பை வாங்கிச் செல்லட்டும் என சவால் விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.
பாதுகாப்பு குளறுபடி
மேலும், விமான நிலையத்தின் ஓல்டு டெர்மினல் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் சில நூறு மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் செருப்பு என அழுத்திச் சொல்லி இருக்கிறார் அமைச்சர் பிடிஆர். இதன் மூலம், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பாஜகவினரை அங்கு அனுமதித்ததையும் சுட்டிக்காட்டி இருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். இந்த விவகாரம் குறித்து விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிண்ட்ரெல்லா கதை
உலகப் புகழ்பெற்ற சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தின் ‘சிண்ட்ரெல்லாவின் மந்திரச் செருப்பு' கதையை, இந்த பிங்க் நிற டிசைன் கொண்ட ஒற்றைச் செருப்போடு இணைத்து பிடிஆர் வெளியிட்டுள்ள இந்த ட்வீட் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. விரைவில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மீதும், செருப்பை மிஸ் செய்த பாஜக நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Recommended Video
வந்து பெற்றுக் கொள்வார்களா?
பாஜக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பைக் கழற்றி வீசுவது தொடர்பான சில படங்கள் நேற்றே வெளியாகியிருந்தன. அமைச்சர் இன்று இந்தச் செருப்பை வாங்கிச் செல்லுமாறு பெருந்தன்மையாக அழைப்பு விடுத்துள்ள நிலையில், செருப்பைத் ‘தவறவிட்டவர்' வந்து வாங்கிச் செல்வாரா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.