”மதுரை விமான நிலைய சிண்ரெல்லா.. ஒத்த செருப்பை வாங்கிக் கொள்ளலாம்” அமைச்சர் பிடிஆர் நக்கல்!
மதுரை: மதுரை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் வீசப்பட்ட செருப்பு புகைப்படத்தை பதிவிட்டு, நக்கலாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அரசு சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

செருப்பு வீச்சு
அப்போது அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எரிந்தார்.

பாஜகவினர் கைது
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜகவின் செயலுக்கு, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ என பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர், பாஜகவைச் சேர்ந்த இரு மகளிர் உட்பட 5 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சரவணனின் அந்தர் பல்டி
இதனிடையே நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பிண அரசியல் செய்வோர் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதோடு, மத அரசியலில் ஈடுபடும் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். 12 மணி நேரத்திற்குள் சரவணன் அடித்த அந்தர் பல்டி அனைவருக்கும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

பிடிஆர் ட்வீட்
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நக்கல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நேற்று கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தையும் இணைத்து, செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பின்னர் விரிவாக பேசலாம். ஆனால், இப்போது மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட, சிண்ரெல்லா தனது ஒத்த செருப்பை மீண்டும் பெற விரும்பினால் தனது ஊழியர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என்று நக்கலடித்துள்ளார்.
Recommended Video

மறைமுக கேள்வி
அதேபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ட்வீட்டில், 100 மீட்டருக்கும் அதிகமான பாதுகாப்பு பகுதிக்குள் பாஜக தொண்டர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்று மறைமுகமாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications