இப்போ பார்த்தீங்கன்னா.. நீட் தேர்வால் பல நன்மைகள் வந்து சேருதுங்க: காமெடி நடிகர் செந்தில் பிரச்சாரம்
மதுரை: நீட் தேர்வால் தற்போது தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் நீட் தேர்வு அவசியம்''என மதுரையில் நடிகர் செந்தில் பேசினார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. அதிமுக தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது.
இதன்மூலம் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர். இருப்பினும் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய சிரமப்படுவதாக திமுக கூறியது. நீட் தொடர்பான தனிப்பயிற்சி மேற்கொண்டு குறைந்தபட்சம் 2 முறை எழுதியே மருத்துவ படிப்பில் சேர்வதாகவும், இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் திமுகவினர் கூறி வருகின்றனர்.

நீட் விலக்கு மசோதா
மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம் என தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் கூறினர். அதன்படி திமுக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி கவர்னர் ரவிக்கு அனுப்பியது. இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கவர்னர் திரும்பி அனுப்பினார். இதனால் மீண்டும் நீட் விலக்கு மசோதா 2 நாட்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செந்தில் பிரசாரம்
இந்நிலையில் தான் மதுரை மாநகராட்சியில் புதுார், நரிமேடு உள்பட பல இடங்களில் நடிகர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். நடிகர் செந்தில் பேசியதாவது:

பாஜகவை வெற்றி பெற செய்யுங்கள்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கொரோனாவை அழிக்க பிரதமர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறார். ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமங்கள்தோறும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை முறையாக நிறைவேற்ற பாஜகவை வார்டுகள் தோறும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நீட் தேர்வு அவசியம்
அரசியல் லாபத்துக்காக எதிர்கட்சியினர் 'நீட்' தேர்வு வேண்டாம் என்கின்றனர். உள் இடஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் அதிகமாக சேர்ந்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் 'நீட்' தேர்வு அவசியம்'' என்றார்.












Click it and Unblock the Notifications