நெல்லை: பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் தனியார் தாளாளர், தலைமை ஆசிரியை விடுவிப்பு
மதுரை: நெல்லையில் தனியார் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் உட்பட 2 பேர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த வேளையில் கழிவறைக்கு சென்ற சில மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

3 மாணவர்கள் உயிரிழப்பு
இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில மாணவர்கள் காயங்களுடன் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்கள். இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விபத்து நடந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடி போராட்டமும் நடந்தினார்கள்.

அமைச்சர்கள் ஆய்வு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சபாநாயகர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலியான மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

பள்ளி தாளாளர் உள்பட 3 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக சாப்டர் பள்ளி தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை எஸ்.பி. பொசிஸ் ஞானசெல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகிய 3 பேர் மீதும் திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர். தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொசிஸ் ஞானசெல்வி ஆகியோர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்கு ரத்து
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கட்டிட விபத்து தொடர்பான விசாரணையில், தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகியோர் இந்த விபத்து நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே பொறுப்பேற்றுள்ளனர். எனவே அவர்கள் விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறி இருவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications