பசும்பொன்னுக்கு வந்து பார்க்கட்டும்.. ஆர்பி உதயகுமார், எடப்பாடிக்கு சவால் விட்ட ஓபிஎஸ் டீம் எம்எல்ஏ!
மதுரை : ஆர்.பி.உதயக்குமார், பசும்பொன்னில் விரட்டப்பட்டார் என்றும், 90% கட்சியினர் என் பக்கம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு வந்து பார்க்கட்டும் என்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சவால் விடுத்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினுடன் அரை மணி நேரம் பேசியதை ஆர்பி உதயகுமார் நிரூபித்தால் நானும் காவி வேட்டி கட்டிக் கொண்டு கட்சியைவிட்டு விலகி விடுகிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன் சவால் விடுத்துள்ளார்.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காத நிலையில், ஆர்பி உதயகுமார் நேற்று முன் தினம் சென்றபோது அங்கு கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சவால் விட்டுப் பேசியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன்.
பசும்பொன்னில் 'தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா'.. அரசியல் தலைவர்கள் நேரில் மரியாதை
தேவர் குருபூஜை
முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா பசும்பொன்னில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு செல்லவில்லை. அதற்குப் பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 11.30 மணியளவில் பசும்பொன் செல்ல இருக்கிறார்.
எடப்பாடியார் வாழ்க கோஷம்
முன்னதாக, நேற்று முன்தினம் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது, அவரது ஆதரவாளர்கள் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். தேவர் நினைவிடத்தில் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டதால், ஆத்திரமடைந்த பசும்பொன் கிராம மக்கள் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பு
அங்கிருந்த ஒருவர், வந்தோமா, சாமி கும்பிட்டோமோ போனாமானு இருக்கணும்.. யாரா வேணா இருங்க.. இங்க வந்து சத்தம் போடக் கூடாது என மிரட்டக் விடுக்கும் வகையில் பேசினார். இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் அங்கே இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பசும்பொன்னில் ஆர்பி உதயகுமார் மரியாதை செலுத்தியபோது, எதிர்ப்பு கிளம்பியதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்தனர்.
தென்னாட்டின் பொன்னாள்
இதையடுத்து, கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், "தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வருவார். சலசலப்பு, சச்சரவுக்கு எல்லாம் எடப்பாடியார் அஞ்ச மாட்டார். நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார். காளையார்கோவிலுக்கு வருவார். இந்த உசிலம்பட்டிக்கும் வருவார். அது நிச்சயமாக நடைபெறும். அந்த நாள் தென் தமிழ்நாட்டின் பொன்னாளாக அமையும்." எனப் பேசினார்.
உசிலம்பட்டியில் ஆலோசனை
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பசும்பொன்னிற்கு செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உசிலம்பட்டி பகுதியில் இருந்து பசும்பொன்னுக்கு கார்களில் பயணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விரட்டி அடிக்கப்பட்டார்
இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், "கட்சியில் 90% பேர் எங்கள் பக்கம் என சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆம்பளையா இருந்தா பசும்பொன்னுக்கு வந்து பார்க்கட்டும். நேற்று கைக்கூலி ஆர்.பி.உதயகுமார் விரட்டியடிக்கப்பட்டார். அவரின் ஆதரவாளர்களால் தேவரின் தங்க கவசத்தை வாங்க முடிந்ததா? அப்படி என்ன செய்தார் ஓபிஎஸ்? மன்னிப்பே கேட்டாலும் கட்சியில் மீண்டும் சேர்க்க மாட்டேன் என சொல்கிறார்கள்.
உதயகுமாருக்கு சவால்
சட்டமன்ற கூட்டத் தொடரின்போது அனைத்து நாட்களிலும், ஓபிஎஸ் உடன் இருந்தேன். ஓபிஎஸ் அரை மணி நேரம் முதல்வர் ஸ்டாலினுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவதாக சவால் விடுத்துள்ளார் ஓபிஎஸ். நேற்று கூட கைக்கூலி ஆர்.பி.உதயகுமார் அதற்கு ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும், நானும் காவி வேட்டி கட்டிக் கொண்டு கட்சியைவிட்டு விலகி விடுகிறேன்" என சவால் விடுத்துள்ளார்.