பாலமேடு ஜல்லிக்கட்டு..23 காளைகளை அடக்கிய தமிழரசன்..கார் பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய மணிகண்டனுக்கு பைக் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டவரின் உரிமையாளருக்கும் பைக் பரிசளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு முதல் நாளாக அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தினர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
11 சுற்றுப் போட்டிகள் நிறைவு: காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. 11 சுற்றுகளாக நடந்த இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததது. சுற்றுக்கு தலா 25 வீரர்கள் வீதம் 250 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்தப்போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். பல காளைகள் தொட்டுப்பார் என்று முட்டி தள்ளி விட்டு பிடிபடாமல் ஓடின.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் என்பவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசு வென்ற விஜய் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். 17 காளைகளைப் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளைப் பிடித்த விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலாஜி மூன்றாம் பரிசு வென்றார்.
மதுரை பாலமேட்டில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் 9 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த பாலமேட்டைச் சேர்ந்த மணிகண்டனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கிய ராஜா 3ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
15 காளைகளை அடக்கிய ராஜா, தனது நண்பர் அரவிந்த் ராஜ் இறந்த சோகத்தில் பாதியில் வெளியேறினார். இருப்பினும் மூன்றாம் இடத்தை தக்கவைத்தார். கருப்பசாமி கோயில் காளைக்கும் மாடுபிடி வீரர் தமிழரசன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications