”புடிச்சு ஜெயில்ல போடுங்க” பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய பாஜக.. மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்
மதுரை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய பாஜகவினர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருந்த ராணுவ முகாமில் கடந்த 11ம் தேதி அதிகாலையில் பயங்கரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன்.

தமிழக அரசு உதவி
நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும்பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயிரிழந்த லட்சுமணின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் லட்சுமணின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மதுரை வந்த ராணுவ வீரரின் உடல்
இதனையடுத்து இன்று நண்பகல் அவரது உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திமுக - பாஜக மோதல்
இதனிடையே அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் வந்த ராணுவ வீரரின் உடலுக்கு, அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னரே, பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எறிந்துள்ளார்.

சு.வெங்கடேசன் கண்டனம்
தமிழக அமைச்சரின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதுரை விமான நிலையத்தின் வெளியே பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை விமான நிலையத்திற்கு வெளியே தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காலணி வீசி அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications