வெளிநாட்டு வேலை.. பெரிய நிறுவனம்.. ஆனாலும் அரசியலுக்கு வந்தேன் -“காரணம்” தெரியுமா? பிடிஆர் ஓபன் டாக்
மதுரை: மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை விளக்கி இருக்கிறார்.
மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பலர் பல்வேறு காரணங்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கலாம். நான் வெளிநாட்டில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
14 மாவட்டங்களில் நாளை கனமழை.. வானிலை மையம் மகிழ்ச்சி செய்தி.. உங்க மாவட்டமும் இருக்கா?
அரசியலுக்கு வந்தது ஏன்?
பின்னர் ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நான் அந்த வெளிநாட்டு வேலையை வேண்டாம் என்று நினைத்து அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அமைச்சரான பிறகு என்னுடைய தொகுதியில் இதுபோல் பல நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உபகரணங்கள் வழங்கியுள்ளேன்.
நலத்திட்ட உதவிகள்
ஏராளமான மக்களுக்கு நானே வீடு தேடி சென்று உதவிகளை செய்திருக்கிறேன். நலத்திட்ட உதவிகளுக்காக 800 பேர் பதிவு செய்து 200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகவும் மீதமுள்ள 600 பேருக்கும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் எனக்கு தகவல் வந்தது.
மறக்க மாட்டேன்
இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொகுதியை சேர்ந்த மக்களை நான் எத்தகைய பொறுப்புக்கு சென்றாலும் மறக்கவே மாட்டேன். முதன் முதலில் எண்ணை இந்த இடத்தில்தான் வாக்காளர்கள் வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கினீர்கள்.
அனைவருக்கும் நன்றி
தற்போது மீண்டும் என்னை இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆசியால் அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த மக்களுக்கு என்றும் நான் நன்றி மறக்காமல் இருப்பேன்." என்றார்.