அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு! தர்மம் -தானம் என்று யாரும் நினைக்காதீர்! முதல்வர் உருக்கம்!
மதுரை: அரசுத் தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை தர்மம் என்றோ, தானம் என்றோ, இலவசம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதில் ஒரு அரசினுடைய கடமையும், பொறுப்பும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
காலை உணவுத் திட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கனவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

உருக்கமான வேண்டுகோள்
''காலை உணவுத் திட்டத்தை இலவசம் என்றோ, தர்மம் என்றோ, தானம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்கக் கூடாது. இது ஒரு அரசினுடைய கடமையும், பொறுப்புமாக அமைந்திருக்கிறது. அத்தகைய கடமை உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும்தான் இந்தத் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அன்புள்ள மாணவச் செல்வங்களே! உங்களுக்கு காலையும் மதியமும் உணவு வழங்குகிறோம். எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள். இது ஒன்றுதான் என்னுடைய வேண்டுகோள். ''

போராடி பெற்ற உரிமை
''கல்வி நாம் போராடி பெற்ற உரிமை! படிப்பு ஒன்றுதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து! அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை நிறைவு செய்யத்தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. நான் இருக்கிறேன். நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.''

படிப்பு தான் முக்கியம்
''படித்துத்தான் ஆக வேண்டுமா? படிக்காமல் முன்னேறியவர்களை எடுத்துக்காட்டாக காட்டுகிறோம்...குறிப்பாக இந்தப் படிப்பைத்தான் படிக்க வேண்டுமா?வேறு படிப்பே இல்லையா?..என்று யாராவது சொன்னால், அவர்களை முட்டாள்களாகப் பாருங்கள்! நீங்கள் படித்து அறிவார்ந்த சமூகமாக முன்னேற இருப்பவர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிச் சென்று விடாதீர்கள். விலகிச் செல்லவும் நான் விட மாட்டேன்.''

மனம் நிறைந்தது
''பிள்ளைகள் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிடும்போது அடையும் மகிழ்ச்சியை அவர்களது முகங்களில் நான் பார்த்தேன். அந்த தருணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியைச் சொற்களால் வர்ணிக்கவே முடியாது. அவர்கள் சாப்பிடும்போது அதைப் பார்த்தேன். என்னுடைய மனம் நிறைந்தது. என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள்-ஒடுக்கப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள்- எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைப்படக் கூடாது.''












Click it and Unblock the Notifications