"நான் 20,000 புத்தகங்களைப் படித்துள்ளேன்.. பிரதமர் மோடி போல ஆக புத்தகங்கள் படியுங்கள்.." அண்ணாமலை
மதுரை: இளைஞர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக அண்ணாமலை, மாணவர்கள் புத்தக வாசிப்பு வழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அண்ணாமலை
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக அண்ணாமலை, "நமது நாடு எப்போதுமே பெண்களுக்குச் சம உரிமையை அளிக்கும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. நமது இந்தியப் பெண்கள் பல சமயங்களில் உலக மகளிருக்கு முன்னுதாரணமாக இருந்து உள்ளனர். இந்தியாவின் கலாசாரம் தான் ஒட்டுமொத்த உலகிற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் வாழ்வதற்குக் கற்பித்த நூல் தான் திருக்குறள்.

இளைஞர்கள்
இந்தியாவில் வாழ்வதே ஒரு பாக்கியம் தான். நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயரத்தைத் தொடலாம். சரியான விஷயங்களைச் செய்யும் போது நம்மால் பல இடங்களுக்குச் செல்ல முடிகிறது. தமிழ்நாட்டில் 74 சதவீத மக்கள் சமூக ஊடகங்களில் தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். இளைஞர்களின் மனதை இதுபோன்ற சமூக ஊடகங்கள் தான் முழுக்க முழுக்க ஆக்கிரமித்துள்ளன. வாட்ஸ் ஆப்பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

20,000 புத்தகங்கள் படித்துள்ளேன்
நமது இளைய சமூகத்தினர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். இது நாள் வரை நான் 20,000 புத்தகங்கள் வரை படித்து இருப்பேன். அதேபோல சுமார் 12 ஆயிரம் புத்தகங்களைப் பராமரித்து வருகிறேன். எனது அலுவலகம், எனது வீடு என எந்த இடத்திற்குச் சென்றாலும் கூட குறைந்தது இரு புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் தொடங்கி உள்ளூர் வரை அனைத்து தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களையும் நாம் வாசிக்க வேண்டும்.

மகாபாரதம்
புத்தகங்களில் தான் வாழ்க்கைத் தத்துவங்கள் நிரம்ப உள்ளன. புத்தகங்களைப் படிக்கத் படிக்க தான் நாம் மனிதன் ஆகிறோம். சாதி, மதங்களைக் கடந்து இங்கு மனிதம் பரவ நாம் அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குறிப்பாக மகாபாரதத்தைக் குறைந்தது ஆயிரம் முறையாவது படிக்க வேண்டும். அதில் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நாம் நேரில் பார்ப்பது போல் இருக்கும்.

பிரதமர் மோடி போல
பிரதமர் நரேந்திர மோடியைப் போல முக்கிய பதவிகளில் அமர வேண்டும் என்றாம் அதிகப்படியான புத்தகங்களை நாம் படிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரியாததை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, புத்தக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications