ராம ஸ்ரீனிவாசனை கண்டுகொள்ளாத நயினார்.. செளராஷ்டிரா, முக்குலத்தோர் பிரதிநிதிகள் புறக்கணிப்பு?
மதுரை: மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்ய வராதது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை தெற்கு தொகுதியில் முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும்பான்மை இருக்கும் போது, நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்திற்கு வராதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கிறது. மதுரை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக ராம ஸ்ரீனிவாசன் களத்தில் இருக்கிறார். இந்த தொகுதியை பொறுத்தவரை செளராஷ்டிரா மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். இதன்பின் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இதில் ராம ஸ்ரீனிவாசன் தெலுங்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் மதுரை மாவட்ட நிர்வாகி ஏ.ஆர்.மகாலட்சுமி தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ராம ஸ்ரீனிவாசனுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் ராம ஸ்ரீனிவாசனும் தொகுதியில் முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
இன்னும் சொல்லப் போனால் சமூக அமைப்புகளிடம் மட்டும் ஆதரவு கோரிய ராம ஸ்ரீனிவாசன், வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய ஆர்வமே காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒன் இந்தியா யூடியூப் சேனலில் திருச்சி சூர்யா கொடுத்த நேர்காணலில், ராம ஸ்ரீனிவாசன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக போட்டு உடைத்தார். அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கூறி இருந்தார்.
இந்த வீடியோக்களை பாஜகவினரே டிரெண்ட் செய்தனர். இதுவும் ராம ஸ்ரீனிவாசனுக்கு பின்னடைவாக மாறியது. அதுமட்டுமல்லாமல் நயினார் நாகேந்திரனுடனும் ராம ஸ்ரீனிவாசன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஏனென்றால் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பாக போட்டியிடும் திருமாறனுக்கு வாக்கு சேகரிக்க சென்றார்.
ஆனால் மதுரை தெற்கு தொகுதியில் மறவர் சமூக மக்கள் அதிகம் வசித்தாலும் கூட, ராம ஸ்ரீனிவாசனுக்காக பிரச்சாரத்திற்கு வரவில்லை. ஏ.ஆர்.மகாலட்சுமி செளராஷ்டிரா சமூக மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கொண்டவர். இப்படி இரு முக்கிய சமூக பிரதிநிதிகளும் ராம ஸ்ரீனிவாசனுக்கு எதிராக நிற்பதாக பார்க்கப்படுகிறது.
ராம ஸ்ரீனிவாசனுக்காக அண்ணாமலை மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மதுரை தெற்கு தொகுதியில் அதிமுகவினர் மூலமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா செய்வதற்கு கொடுத்த பணத்தில் பாதியை கட்சியினரே கையாடல் செய்வதாகவும் விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications