பணி நீக்கம் செய்யப்பட்ட.. 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.. அமைச்சர் தகவல்!
மதுரை: மதுரையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மக்களுக்கு உதவி
இந்த திட்டத்தை மதுரை அருகே கருப்பாயூரணியில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மொத்தம் 3894 பயனாளிகளுக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலான கடன் உதவியும், நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து பெட்டகம் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மதுரையில் பாதிப்பு குறைவு
பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:- முன் களப்பணியாளர்களுக்காக பல்வேறு திட்டங்கள் தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க மேற்கொண்ட தீவிர முயற்சியால் மதுரை மாவட்டத்தில் 1500 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 500 ஆக குறைந்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டனர்
கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பை கண்காணிக்க பெண்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனோ முதல் அலையின் பது ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்கள் ஓராண்டு ஒப்பந்த காலம் நிறைவு பெறும் முன்பே பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி வழங்க கோரி அவர்கள் கலெக்டரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மீண்டும் பணி வழங்கப்பட்டது
இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 29 ஆயுஷ் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கியதை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications