அமமுக உருவாக காரணமே ‘அவங்க’ தான்! புள்ளி வைத்து பேசிய டிடிவி தினகரன்! 2023ல் மெகா ட்விஸ்ட்
மதுரை : ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது எனவும், 2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டுமென பாஜக தலைமை விரும்பும் நிலையில், தனக்கான முக்கியவத்துவம் குறைந்து விடுமென்பதாக எடப்பாடி பழனிசாமி முற்றாக மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் அரசியல் கிளைமேட் மாறியுள்ள நிலையில், பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன்
ஆனால் டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

கோவை செல்வராஜ்
இந்நிலையில் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது அதிமுகவில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. ஜெயலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவன். அப்படி இருக்கையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் பங்குக்கு கொளுத்திப் போட்டுள்ள நிலையில் அதையே பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனிடம் கேட்டதற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

திமுக அரசு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது. போடாத சாலைகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பதுதான் ஒரு கட்சியின் மாண்பு. ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக திமுக பேசிவருகிறது. திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும், பொதுமக்கள், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டி திமுகவை தோல்வியடையச் செய்வார்கள்.

தேர்தல் வியூகம்
2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் இருந்த அதிகாரத்தையும், பணத்தையும் நம்பிதான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அதிமுக, நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ்தான் காரணம். ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா மௌனம் காப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications