இந்த ஆண்டிலேயே.. மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை நடத்த தயார்.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டால், இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனை அமைக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் கட்டுமானப் பணிகள் முடிந்ததாகத் தெரியவில்லை,

மதுரை எய்ம்ஸ்
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன் பிறகு கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மதுரை எய்மஸ் மருத்துவமனைக்குப் பிறகு மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் ஆண்டுக் கணக்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறாமலேயே இருந்தது.

சட்டசபைத் தேர்தல்
இதைச் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திலும் திமுக முன்னெடுத்தது. பிரசாரத்தின் சமயத்தில் ஒற்றை செங்கல்லைக் காட்டி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி செய்த பிரசாரம் தமிழ்நாட்டில் பல வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முடியும் வரை, தற்காலிகமாக ஒரு இடத்தை தொடங்கி அங்கு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையையும் புற நோயாளிகள் பிரிவையும் தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் (ஜூலை 30) விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாகத் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நடப்பு ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை
அந்தக் கடிதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் 50 முதல் 100 மாணவர்கள் வரை முதலில் சேர்க்கை நடத்தத் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications