தீய சக்தி கருணாநிதி என சொன்னால் ஓபிஎஸ்சுக்கு பதவி தர ரெடி.. ஆர்.பி.உதயகுமார் போட்ட "குரூர கண்டிஷன்"
மதுரை : சட்டசபையில் ஒரே ஒரு நாளாவது, 'தீய சக்தி கருணாநிதி' என ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டால் அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவி வழங்க நாங்கள் தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதனை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. ஓபிஎஸ்ஸின் இருக்கையையும் மாற்றவில்லை.
ஓ.பன்னீர்செல்வமே இப்போதும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடரும் நிலையில், ஆர்.பி.உதயகுமார், அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஓபிஎஸ்ஸை சாடிப் பேசியுள்ளார்.
புள்ளி வைத்த கருணாநிதி.. ரூ.320 கோடியில் பிரமாண்ட கட்டிடம்! சென்னை மெட்ரோ தலைமைகத்தை திறந்த ஸ்டாலின்
தீய சக்தி கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை தீய சக்தி என விமர்சிப்பது வழக்கம். தற்போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீயசக்தி கருணாநிதி என்றே குறிப்பிட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் மத்தியில் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசுவதை ஈபிஎஸ் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதேநேரம், ஓபிஎஸ், திமுகவை விமர்சிப்பதில்லை என்பதையும் எடப்பாடி தரப்பினர் குற்றச்சாட்டாக முன்வைத்து வருகின்றனர்.
பெயரை சொல்லக் கூட
ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் ஈபிஎஸ் அணியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். எனது அப்பா கலைஞரின் பரம ரசிகர் என ஓபிஎஸ் சட்டசபையில் பேசியதைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கருணாநிதி பெயரை சொல்லக்கூட ஓபிஎஸ் தயங்குகிறார், அவரை எப்படி அதிமுக தலைமைப் பொறுப்பில் வைப்பது என்றும் ஈபிஎஸ் அணியில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதை மட்டும் சொல்லிட்டா
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி உதயகுமார் பேசுகையில், "எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பதில் தற்போது போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்த்திற்கு ஒரு சவால். சட்டசபையில் ஒரே ஒரு நாள் ஒரு முறை, "தீய சக்தி கருணாநிதி" என ஓ.பன்னீர்செல்வம் கூறினால், அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவி வழங்க நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்." என சவால் விடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்கூட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "வேட்டு போடும் திருவிழாவான தீபாவளிக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை. அதனால் உங்களுக்கு இல்லை ஒட்டு வைக்கிறோம் வேட்டு என்று மக்கள் கூற வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது, நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்ற சம்பவங்கள் பற்றி எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்விகள் கேட்டார். அதற்கு முதல்வரால் பதிலளிக்க முடியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி விடுகிறது.
திமுக அரசை தூக்கி எறிவார்கள்
பயங்கரவாதத்தை அரசு வேடிக்கை பார்த்தால், மக்கள் தூக்கி எறிவார்கள். அரசை தூக்கி எறியும் சக்தி மக்களுக்கு உள்ளது. தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசை தூக்கி எறியும் வரலாறு மீண்டும் உருவாகும்.