பரந்தூரில் புதிய ஏர்போர்ட் 100% வரும்! ஒரே ஒரு கிராமத்தில்தான் பிரச்னை! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உறுதி
மதுரை: சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து சில முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். மேலும், பொங்கல் தொகுப்பு குறித்தும், பரந்தூர் விமான நிலையம் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம் நிலங்கள் கையகப்படுத்தும் பணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த -அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "மதுரை விமான நிலையம் நிலங்கள் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது.. 186.31 ஹெக்டார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன மீதமுள்ள நிலங்களும் விரைவாகக் கையகப்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

பொங்கல் தொகுப்பு
தொடர்ந்து பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் இரட்டை நிலை நீடிப்பது குறித்த கேள்விக்கு, "எதிர்க்கட்சிகளுக்குப் பயப்படும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை.. கரும்பு மக்களுக்காகவே கொடுக்கப்பட உள்ளது... விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுத்தான் கரும்புகளைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எழுப்பத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்து கொண்டு இருந்தால் இந்த ஆட்சியை நடத்த முடியாது. எதிர்கட்சிகளுக்கு பயப்படும் முதலமைச்சர் நம் முதலமைச்சர் இல்லை" என்றார்.

ஒரு கிராமத்தில் மட்டுமே பிரச்சினை
தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஊர் மட்டும் பிரச்சினையாக உள்ளது. அங்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அங்குக் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்று மடங்கு கூடுதலாகப் பணம் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

100% ஏர்போர்ட் வரும்
நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஓரிரு நாட்களில் நடைபெறும் பணி அல்ல அவர்களிடம் பேரம் பேசிய அவர்களைத் திருப்திப்படுத்தி அதன் பிறகு தான் நிலங்களைக் கையகப்படுத்த முடியும். அவசர அவசரமாக நில எடுப்பு பணிகளை இந்த அரசாங்கம் செய்யவில்லை. 100% கட்டாயம் பரந்தூர் விமான நிலையம் வரும் சென்னையின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்பதை முதல்வர் உணர்ந்துள்ள அதற்கான பணிகளை முதல்வரும் அமைச்சர் ஏ.வ.வேலுவும் செய்து வருகின்றனர்.

மக்களுடன் பேசி நல்ல முடிவு
இரண்டு துறைகள் சேர்ந்துதான் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் மதுரை விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எந்த பிரச்சினையிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கக் கூடிய நிலைமை இல்லை. கிராமத்தில் சுடுகாட்டுக்கு ரோடு போடுவது என்றால் கூட பிரச்சினை உள்ளது எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்களோடு கலந்து பேசி அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய ஏர்போர்ட்
சென்னையில் இப்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் அங்குப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், ஒரு பக்கம் ராணுவ இடம் மற்றொரு பக்கம் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால், விரிவாக்க பணிகள் சாத்தியமில்லாமல் போனது. இதையடுத்து பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications