விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நாளை சீர்காழியில் பள்ளிகள் திறக்கப்படாது - அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை : சீர்காழியில் கனமழை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நாளை சீர்காழியில் பள்ளிகள் திறக்கப்படாது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.
தொடர் கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுமார் 135 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் ஒருவருக்கே பல பணிகள்.. திமுக ஆட்சியில் அப்படியில்லை.. குற்றம்சாட்டும் எ.வ.வேலு!
சீர்காழியில் மழை
அதில் உள்ள பீங்கான்கள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அதனை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதீத கனமழை காரணமாக சீர்காழியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் 40 கிராமங்களுக்கு மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்மாற்றிகள் பழுது காரணமாக மின்சார விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
மின் ஊழியர்கள் தீவிரம்
தொடர்ந்து ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலைக்குள் நிலைமை சீர் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ள நீர் பகுதியில் இருக்கும் மின் கம்பம் ஒன்றில் மின்வாரிய ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மெய்யநாதன் ஆய்வு செய்தனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடைமைகளை இழந்துள்ளோம். பள்ளி பாடப்புத்தகங்கள், ஆதார் கார்டு உள்ளிட்டவை சேதமடைந்ததால் அவற்றை திரும்பதர ஏற்பாடு செய்ய வேண்டும், உடனடியாக நீரை அகற்ற வேண்டும் என அமைச்சர்களிடத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பள்ளிகள் திறக்கப்படாது
இதனையடுத்து அனைத்து மாணவர்களுக்கும், புதிய புத்தகங்கள் வழங்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆவணங்களையும் உடனே வழங்கவும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், சீர்காழியில் கனமழை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நாளை சீர்காழியில் பள்ளிகள் திறக்கப்படாது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.