சமூக பரவலாக மாறும் ஓமிக்ரான்? மும்பையில் 3இல் ஒருவருக்கு பாதிப்பு.. வெளியான பரபர தகவல்
மும்பை: மும்பையில் பரிசோதனைக்கு அனுப்பப்படும் 37% பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படுவதாகத் தெரிவித்துள்ள மும்பை மாநகராட்சி இது குறித்து சில அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா, மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த உலகை மீண்டும் அப்படியே ஊரடங்கு நோக்கி இழுத்துச் செல்கிறது. பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலும் கூட கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் மேல்நோக்கி செல்கிறது. பல வாரங்களுக்குப் பின்னர் நாட்டின் தினசரி வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஓமிக்ரான் கேஸ்கள்
அதேபோல ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி இந்தியாவில் தற்போது 1270 ஓமிக்ரான் கேஸ்கள் உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மாநிலத்தில் அதிகபட்சமாக 450 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி, கேரளா மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூன்றில் ஒருவர்
இந்நிலையில், மும்பையில் ஓமிக்ரான் பரவல் குறித்து அம்மாநகராட்சி சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 22 தேதிகளில் கொரோனா உறுதியான 37% மும்பைவாசிகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்களாகும். மொத்தம் 375 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் அதில் 141 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை
மும்பையில் மட்டும் மொத்தம் 153 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 12 பேர் மட்டும் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். மற்ற 141 பேர் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்கள். இந்த 141 ஓமிக்ரான் நோயாளிகளில், 89 பேர் ஆண்கள் மற்றும் 52 பேர் பெண்கள் ஆகும். மேலும் இந்த 141 பேரில், 93 பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் 3 பேர் ஒரு டோஸ் வேக்சின் எடுத்துள்ளனர். 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை. 39 பேருக்கு லேசான அறிகுறிகளும் 7 பேருக்குச் சற்று தீவிரமான அறிகுறிகளும் உள்ளன.

சமூக பரவல்
இது ஓமிக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதைக் குறிப்பதாக சில சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல அதேபோல டெல்லியிலும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத 25 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா உறுதியாகும் அதிகப்படியான பேருக்கு ஓமிக்ரான் உறுதியாவதால் இது சுகாதார பரவலாக மாறியிருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எச்சரித்திருந்தார்.












Click it and Unblock the Notifications